ஜஸ்டின் பிரபாகரன் இசையில் `ஆடினே இருப்பேன்” பாடலும், கிளைமாக்ஸ் பாடலும் கவனிக்க வைக்கிறது. பின்னணி இசையிலும் ஆங்காங்கே கைகொடுத்திருக்கிறார். மதன் கிறிஸ்டோபரின் ஒளிப்பதிவில் கிராமத்து அழகும், பெங்களூரு ‘வைப்’பும் கச்சிதமாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. எடிட்டர் ஆர்.கே. செல்வா தன் அனுபவத்தைப் பயன்படுத்தி பல காட்சிகளின் நீளத்தை இன்னும் குறைத்திருக்கலாம்.
பேச வேண்டிய மிகவும் முக்கியமான கதைக்கருவைக் கையிலெடுத்திருக்கும் இயக்குநர், அதை வெளிப்படுத்தும் கிளைமாக்ஸ் காட்சியில் மட்டுமே நினைத்ததைச் செய்திருக்கிறார்.
உருவக்கேலிக்கு எதிராகப் பேச முயலும் இயக்குநர், முதல்பாதியில் காத்து முத்து கதாபாத்திரத்தைக் காட்சிப்படுத்திய விதத்தில் கண்ணியக்குறைவாக உருவக்கேலியோடு காட்சிப்படுத்தியது ஏனோ? மேலும், வட இந்தியத் தொழிலாளர்கள் குறித்த கேலி, கிண்டலை வைத்திருப்பதும் அபத்தம்.

அதுவும் கேலியாகக் குறிப்பிடும் காட்சியில் குதிரை கணைப்பதாக வரும் இசையைத் தவிர்த்திருக்கலாம். கதையின் மையத்தை நோக்கி முதல் காட்சியிலேயே தொடங்கும் படம், எங்கெங்கோ பயணித்து கதையின் முக்கிய உரையாடலைப் பேசுவதற்குள் தொய்வு ஏற்படுகிறது.
மேலும், வழக்கொழிந்து போன சமூக வலைத்தளம், டிக்டாக் காமெடிகளையும் தவிர்த்திருக்கலாம்.
