“தி.மு.க. காபந்து அரசுக்கு வெட்கமாக இல்லையா?”

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய், நாளை (28-03-26) பெரம்பூர் தொகுதியில் முதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க இருப்பதாகக் கூறப்பட்டது. தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், நாளை காலை 10 மணியளவில் எம்.கே.பி நகர் பேருந்து நிறுத்தம் அருகே விஜய் பரப்புரை மேற்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என தவெக தரப்பில் கடந்த 25ஆம் தேதி தேர்தல் அதிகாரிகளிடம் அனுமதி கோரப்பட்டது.

இந்த சூழலில், தவெக கேட்ட எம்.கே.பி நகர் பேருந்து நிறுத்தம் பகுதி என்பது நெருக்கடியான இடம் என்பதாலும், அந்த இடத்தில் 3,000 பேர் கூட முடியாது என கூறி விஜய்யின் பிரச்சாரத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. மேலும் மாற்று இடம் கோரி விண்ணப்பிக்க தவெகவுக்கு காவல்துறையினர் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் திமுக மீது கடுமையாக கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் திட்டமிடப்பட்ட பரப்புரைக்குச் சென்னை மாநகரக் காவல் துறையும், அதிகாரிகள் சிலரும் இணைந்து முட்டுக்கட்டை போட்டிருப்பது, ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்டுள்ள ஒரு பாசிசத் தாக்குதலே ஆகும். நிகழ்ச்சிக்கு இரண்டு நாள்கள் முன்பே (26/03/26) தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், சென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி, முல்லை நகர் சந்திப்பில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டது.

ஆனால், நம்முடைய தேர்தல் பரப்புரை நிகழ்வுக்கு ஒரு நாளுக்கு முன்பு சென்னை மாநகராட்சி சார்பில் திடீரென அந்த இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டு, இரும்பால் ஆன தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த திடீர்ப் பள்ளங்களும் தடுப்புகளும் எங்கிருந்து வந்தன?? இந்த நிலையில் அங்கே காவல் துறை ஆய்வு செய்து 3000 பேர் கூட முடியாது என்று கூறியுள்ளது. இதன் அடிப்படையில் தற்போது அந்த இடம் பிரச்சாரம் செய்வதற்கு உகந்ததல்ல என்று அனுமதி மறுக்கப்பட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இப்படி அதிகாரிகள் சிலரின் துணையுடன் த.வெ.க.விற்கு எதிராகச் செயல்படும் தி.மு.க. காபந்து அரசுக்கு வெட்கமாக இல்லையா?

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நான் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள முயற்சி செய்யும் போதெல்லாம், தி.மு.க. அரசு ஏதேதோ காரணங்களைக் கூறி, அனுமதியைத் தாமதிப்பதும் அல்லது அனுமதி மறுப்பதும் தொடர்கதையாகி வருகிறது. மக்களின் பேராதரவைப் பெற்ற ஒரு புதிய அரசியல் கட்சியின் ஜனநாயக உரிமைகளைத் திட்டமிட்டு நசுக்கும் இந்தச் செயல், ஆளுங்கட்சியின் ஏவலர்களாக அதிகாரிகள் சிலர் செயல்படுகிறார்களா என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. அத்துடன் “எங்களுக்கு எதிராக யார் உருவெடுத்தாலும் அவர்களை அதிகார பலத்தால் நசுக்குவோம்” என நினைப்பது அப்பட்டமான அடக்குமுறையே ஆகும். தமிழக வெற்றிக் கழகத்தைக் கண்டு தி.மு.க. எந்த அளவிற்கு அஞ்சுகிறது என்பதற்கு இந்தத் தடையே சாட்சி. எனவே, வரும் சட்டமன்றத் தேர்தலில் ஜனநாயக விரோதத் தி.மு.க. ஆட்சியைத் தமிழக மக்கள், வீட்டிற்கு அனுப்பப் போவது உறுதி” எனத் தெரிவித்துள்ளார். 

Source link