தே.மு.தி.க தரப்புடன் தி.மு.க தரப்பு நேற்று ஒரே நாளில் மூன்று முறை பேச்சுவார்த்தை நடத்தியது. தே.மு.தி.க தரப்பில் தற்போது தி.மு.க வசம் உள்ள தொகுதிகளை கேட்டதோடு, தி.மு.க-வின் மாவட்ட செயலாளர்கள் களம் இறங்க உள்ள தொகுதிகளையும் தங்களுக்கு வேண்டும் என விடாப்பிடியாக கேட்டது. இதனால் நேற்று மாலை வரை அந்த கட்சியுடன் தொகுதியை இறுதி செய்யாமல் தே.மு.தி.க இழுத்தடித்து வந்தது.
இந்நிலையில், இன்று காலை முதல்வரே தலையிட்டு தே.மு.தி.கவுக்கான தொகுதிகளை இறுதி செய்யும் பணியை கையில் எடுத்திருக்கிறார். அவர் பேசி தே.மு.தி.க கேட்ட சில தொகுதிகளை மட்டும் மாற்றிக்கொடுத்துள்ளார். அதன்படி பல்லாவரம், திருத்தனி, ஓமலுார், மைலம், போளூர், குடியாத்தம்,சேலம் மேற்கு, தர்மபுரி, விருதுநகர், விருதாசலம் ஆகிய பத்து தொகுதிகள் தே.மு.தி.க-வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது எனத் தெரிகிறது.
ரிஷிவந்தியம், திருக்கோவிலுார், விக்கிரவாண்டி உள்ளிட்ட தொகுதிகளை தே.மு.தி.க கேட்டதற்கு அது தி.மு.க-வின் ஆதர்சன தொகுதி என முதல்வர் சொல்லியிருக்கிறார்.

அதே போல், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடந்த இரண்டு நாட்களாக தி.மு.க தலைமையுடன் தொகுதியை இறுதி செய்ய பேசிவந்தது. காங்கிரஸ் வலுவாக உள்ள கன்னியாக்குமரி மாவட்டத்தில் தங்களுக்கு ஒரு தொகுதி வேண்டும் என மார்சிஸ்ட் வலியுறுத்தியது. ஆனால், காங்கிரஸ் தரப்பு அதை கொடுக்க மறுத்தது.
இறுதியாக அமைச்சர் மனோ தங்கராஜ் வசம் உள்ள பத்மநாபபுரம் தொகுதியை மார்சிஸ்ட் கட்சிக்கு தர தி.மு.க முன்வந்தது. ஆனால், மார்சிஸ்ட் தரப்பில் விளவங்கோடு தொகுதி வேண்டும் என்று உறுதியாக நின்றனர். இதனால், தி.மு.க தரப்பு டெல்லியில் உள்ள செல்வ பெருந்தகையுடன் இன்று காலை தொடர்பு கொண்டு பேசினார்கள். விளவங்கோடு தொகுதியை விட்டுக்கொடுக்க செல்வ பெருந்தகை ஒப்புக்கொண்டுள்ளார். இதன்பிறகு, மார்சிஸ்ட் கட்சிகான தொகுதிகள் இறுதியாக உள்ளது.
