ஹார்முஸ் ஜலசந்தியில் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் சவுதி இளவரசரிடம் மோடி வலியுறுத்தல்

புதுடில்லி: ”ஹார்முஸ் ஜலசந்தியில் தடையற்ற கப்பல் போக்குவரத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்,” என, சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும், அந்நாட்டின் பிரதமருமான முகமது பின் சல்மானிடம் பிரதமர் மோடி நேற்று வலியுறுத்தினார்.

ஈரான் போருக்கு தீர்வு காணும் வகையில், மேற்காசிய நாடுகளான ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், ஓமன், பஹ்ரைன் உட்பட பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி சமீபத்தில் பேசினார். இதேபோல் ஈரான் அதிபர் மசூத் பெஷெஸ்கியானுடனும் பிரதமர் மோடி தொலை பேசியில் பேசினார்.

இந்நிலையில், சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும், அந்நாட்டின் பிரதமருமான முகமது பின் சல்மானுடன், பிரதமர் மோடி தொலைபேசியில் நேற்று பேசினார்.

இது குறித்து பிரதமர் வெளியிட்ட அறிக்கை:

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் சூழல் குறித்து, சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடன் நேற்று விவாதித்தேன். அந்நாட்டில் உள்ள எரிசக்தி நிலையங்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலுக்கு, இந்தியா சார்பில் கண்டனம் தெரிவித்தேன்.

அப்பிராந்தியத்தில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியில் தடையற்ற கப்பல் போக்குவரத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதன் அவசியத்தை வலியுறுத்தினேன்.

அங்குள்ள பதற்றமான சூழலில், கப்பல் போக்குவரத்தை பாதுகாப்பாக இயக்குவதை உறுதி செய்வதும் எவ்வளவு முக்கியம் என்பதில், இரு தலைவர்களும் ஒருமித்த கருத்துகளை வெளிப்படுத்தினோம்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Source link