திருப்பூர்: ”தமிழகத்தில், மோசமான ஆட்சியை தி.மு.க., நடத்தி வருகிறது,” என, மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் குற்றஞ்சாட்டினார்.
திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., அலுவலகத்தில், நேற்று நடந்த தேர்தல் ஆலோசனை கூட்டத்தில், பா.ஜ., மேலிட இணை பொறுப்பாளரான மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் பங்கேற்றார். அவர் பேசியதாவது:
கடந்த தேர்தலின்போது, தி.மு.க., தேர்தல் அறிக்கையில், பொருளாதாரத்தை உயர்த்துவோம்; சட்டம் – ஒழுங்கில், தமிழகத்தை முன்மாதிரியாக இருக்க செய்வோம் என்றெல்லாம் கூறினர். ஆனால், கடந்த ஐந்தாண்டு காலத்தில், தன் குடும்பத்தை மட்டுமே உயர்த்தி வந்துள்ளனர்.
சட்டம் – ஒழுங்கு என்பதே இல்லாமல் போய்விட்டது. தினமும் ஒரு கொலை, கொள்ளை, போதை பொருள் விற்கும் இடமாக தமிழகம் மாறி விட்டது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள், தினந்தோறும் நடக்கிறது. மிக மோசமான ஆட்சியை, தி.மு.க., நடத்தி வருகிறது. தேர்தலில், மத்திய அரசின் திட்டங்களை எடுத்துரைத்து பா.ஜ.,வினர் ஓட்டு கேட்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
