தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கார்பன் டை ஆக்சைடு உமிழ்வை கட்டுப்படுத்த, உலக நாடுகள் போராடி வரும் நிலையில், ‘கார்பன் கேப்சர், யுட்டிலைஷேசன் அண்டு ஸ்டோரேஜ்’ (சி.சி.யு.எஸ்.,) தொழில்நுட்ப வளர்ச்சிக்காக, 2027ம் நிதிஆண்டு மத்திய பட்ஜெட்டில் 20,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது, இந்தியாவின் காலநிலை கொள்கையில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
அரசின் இந்த நடவடிக்கையால், மின்சாரம், ஸ்டீல், சிமென்ட், எண்ணெய் சுத்திகரிப்பு, பெட்ரோகெமிக்கல், ரசாயனங்கள் ஆகிய துறைகள் பலனடையும் என்பதால், இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்திருப்பவர்கள் இந்த துறை சார்ந்த பங்குகளை நீண்டகால முதலீட்டுக்கு பரிசீலிக்கலாம் என, சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பங்குச்சந்தை ஆலோசகர் ஏ.கே.பிரபாகர் கூறியதாவது:
” சி.சி.யு.எஸ்., ஊக்கத்திட்டம், கார்பன் உமிழ்வுள்ள மின்சாரம், ஸ்டீல், சிமென்ட், எண்ணெய் சுத்திகரிப்பு, பெட்ரோகெமிக்கல், ரசாயனங்கள் மற்றும் அதனை சார்ந்த தொழில் துறைகளுக்கு பயன் அளிக்கும்.
சி.சி.யு.எஸ்., தொழில்நுட்பம் இந்தியாவில் மேலும் வலுப்பெறும்போது, ஐரோப்பிய சந்தையில் இந்திய ஸ்டீல்களுக்கான தேவை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து துறைகளிலும் கார்பன் உமிழ்வு நடவடிக்கைகளில் மாற்றம் நிகழும் போது, இந்தியாவுக்கு உலக நாடெங்கிலும் சந்தை வாய்ப்புகள் பெருகும்.
இனி வரும் காலங்களில், பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மேலே குறிப்பிட்ட துறை சார்ந்த நடவடிக்கைகளை உற்று கவனிப்பது முக்கியம். ஏனெனில், சி.சி.யு.எஸ்., திட்டத்தை அமல்படுத்தும் நிறுவனத்தின் ஆர்டர் புத்தக மதிப்பு அதிகரிக்கும்.
இது அந்நிறுவனத்தின் பங்கு விலையில் நிச்சயம் எதிரொலிக்கும்” என அவர் தெரிவித்தார்.
