சென்னை: அதிமுகவின் பிரசாரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போலீசார் நடந்து கொள்வதாகவும், அவர்கள் மிரட்டுவதாகவும் அதிமுக குற்றம்சாட்டி உள்ளது.
இது தொடர்பாக அதிமுக செய்தித் தொடர்பாளர் கல்யாணசுந்தரம் கூறியதாவது: நேற்று நாங்கள் தேர்தல் பிரசாரத்தில் இருந்தோம். அப்போது, போலீஸ் அதிகாரிகளிடம் இருந்து சம்மன் வந்தது. ஆதம்பாக்கம் இன்ஸ்பெக்டர் முன்பு ஆஜராக வேண்டும் என கூறினர். அவர்கள் முன்பு ஆஜரானேன்.எனது யுடியூப் சேனலில் சவுக்கு சங்கர் வீடியோவை பதிவிட்டீர்களா என கேட்டனர். அதற்கு ஆமாம் என்று தெரிவித்தேன். எங்கிருந்து வீடியோ கிடைத்தது என போலீசார் கேட்டனர்.அந்தவீடியோ இணையதளத்தில் கிடைக்கிறது. அதில் என்ன பிரச்னை என கேட்டேன்.
இந்த வீடியோக்கள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது. எதிர்க்கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தித்தொடர்பாளர் என்ற முறையில், பதிவிடுவது எனது கடமை. அதனை செய்தேன்.ஆனால், போலீஸ் இன்ஸ்பெக்டரின் குரல் மிரட்டுவது போன்று இருந்தது.
வீடியோ எங்கிருந்து கிடைத்தது என கூறும்படி கேட்டார். அதற்கு நான், கனிமொழி மற்றும் உதயநிதி அலுவலகத்தில் உள்ளவர்களில் சிலரிடம் இருந்து வந்தது.நான் அதனை பதிவிட்டேன். உதயநிதி, கனிமொழிக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க வேண்டும். அனைத்து சவுக்கு சங்கர் வீடியோக்கள் உதயநிதி அலுவலகத்தில் உள்ளது. சோதனை செய்ய வேண்டும்.
எங்களை மிரட்ட வேண்டும் என நினைக்கின்றனர். தேர்தல் பிரசார நேரத்தை வீணடிக்க விரும்புகின்றனர். இதுதான் போலீசின் நோக்கம்.இந்த போலீஸ் அதிகாரிகள் ஆளுங்கட்சிக்காக பணியாற்றினர். அரசுக்காக பணியாற்றவில்லை. தற்போதும் ஆளுங்கட்சிக்காக பணியாற்றுகின்றனர். எங்களின் பிரசார நேரத்தை வீணடிக்க விரும்புகின்றனர்.இதனால், போலீஸ் ஸ்டேசன் வரவழைத்து 4 அல்லது 5 மணிநேரம் அமர வைத்து நேரத்தை வீணடிக்கின்றனர். இதுபோன்ற போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் தனி நபரை மிரட்டவில்லை. இது ஜனநாயகத்துக்கு மிரட்டல் விடுக்கின்றனர். போலீஸ் அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நேர்மையான தேர்தல் நடத்த அந்த போலீஸ் அதிகாரி மாற்றப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
