இங்கே அவன் லிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டது மாலை வேளையில். ஆகவே இந்தக் கோயிலில் மாலையில் நடைபெறும் சாயரட்ச பூஜை விசேஷம். இந்திரன் தனது யானையான ஐராவதத்தை அனுப்பி ஒழுகினசேரி ஆற்றிலிருந்து தீர்த்தம் கொண்டு வரச் செய்து ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்தானாம். இன்றைக்கும் மாசிமாதம் அந்த ஆற்றில் ஸ்வாமி ஆறாட்டு வைபவம் நிகழ்கிறது.
வடிவு என்றால் அழகு என்று அர்த்தம். ஈஸ்வரன் என்ற பெயர் சிவபெருமானைக் குறிக்கும். அழகே உருவான அழகம்மனுடன் சுந்தரேஸ்வரர் கோயில் கொண்டிருப்பதால் இந்தத் தலத்துக்கு வடிவீஸ்வரம் என்று திருப்பெயர்.
மண்டைக்காடு கோயிலில் பகவதி அம்மன் ஶ்ரீசக்கரத்தில் அமர்ந்திருப்பாள். இங்கேயோ அம்பாள் ஶ்ரீசக்கரம் போன்ற பத்ம பீடத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள்.

திருக்கோட்டாற்றுப் பதிகத்தில் இந்தத் தலம் பற்றி திருஞானசம்பந்தர் பாடி உள்ளார். நாகராஜா கோயிலைப் போன்று கேரளா ஆகமப்படி இது ஓட்டுக் கோயிலாகவே இருந்தது. பிற்காலத்தில் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. பெளர்ணமி தினங்களில் அழகம்மன் தேரில் பவனி வருவாள். பெண்களே அதிகம் வடம்பிடிப்பது சிறப்பு.
அற்புதமான இந்த ஆலயத்தில் சித்திரை விஷு, வைகாசி விசாகம், ஐப்பசியில் திருக்கல்யாணம், கந்தசஷ்டி விழா, கார்த்திகை தீபம், சொக்கப்பனை வைபவம், மார்கழி வழிபாடுகள் – ஆருத்ரா தரிசனம், மாசித் திருவிழா, பங்குனி உத்திரம், புரட்டாசியில் நவராத்திரி எனத் திருவிழாக்கள் சீரும் சிறப்புமாக நடைபெறுகின்றன.
குழந்தைப் பாக்கியம், திருமணப்பேறு கிடைக்கவும், குடும்பப் பிரச்னைகள் தீரவேண்டியும் எண்ணற்ற பக்தர்கள் இந்தத் தலத்துக்கு வந்து வழிபட்டுச் செல்கிறார்கள். இந்த ஆலயத்தில் சுயம்வர பார்வதி அர்ச்சனை செய்தால் கல்யாணம் ஆகாதவர்களுக்கு, தடைகள் நீங்கி விரைவில் கல்யாணம் ஆகும் என்பது நம்பிக்கை.
அதேபோல், இங்கே சாயரட்சை பூஜை விசேஷம். இதில் கலந்துகொண்டு தரிசித்தால் சகல நன்மைகளும் கைகூடும்.
பள்ளியறை பூஜையின்போது பால் சமர்ப்பித்து வழிபட்டால், குழந்தை இல்லாத தம்பதியருக்கு விரைவில் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் என்கிறார்கள் பயன்கண்ட பக்தர்கள்.
