September 2 Stock Market Update,சரிவுப் பாதையில் இந்திய பங்குச் சந்தை – முதலீட்டாளர்களுக்கு கவலை தரும் செய்தி – sensex and nifty on the lower trend today 2nd september what is the reason and what to watch out

புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலியாக இன்று (செப்டம்பர் 2) புதன்கிழமை பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கியது. உலகளாவிய சந்தைகளின் சரிவு மற்றும் மேற்காசியாவில் அதிகரித்து வரும் மோதல்கள் காரணமாக சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் சரிவைச் சந்தித்தன. இன்றைய ர்த்தகத் தொடக்கத்தின்போது 30 பங்குகள் அடங்கிய பிஎஸ்இ சென்செக்ஸ் 788.52 புள்ளிகள் சரிந்து 76,155.76 என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. அதேபோல், 50 பங்குகள் அடங்கிய என்எஸ்இ நிஃப்டி 269 புள்ளிகள் குறைந்து 23,786.80 என்ற நிலைக்கு வந்தது.

லாபம் மற்றும் நஷ்டம் அடைந்த பங்குகள்!

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள நிறுவனங்களில் இன்டிகோ ஏவியேஷன் ( InterGlobe Aviation ), எட்டர்னல் ( Eternal ), மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, அல்ட்ராடெக் சிமெண்ட், பஜாஜ் ஃபின்செர்வ் மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகிய பங்குகள் பெரும் சரிவைச் சந்தித்தன. மறுபுறம், அதானி போர்ட்ஸ் மற்றும் சன் பார்மா பங்குகள் லாபத்துடன் வர்த்தகமாகின.

முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை!

மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் மோதல்களால் கச்சா எண்ணெய் விலை மற்றும் உலகளாவிய கடன் பத்திரங்களின் (Bond yields) வட்டி விகிதம் உயர்ந்து வருவதால், இந்தியச் சந்தைகள் தொடர்ந்து அழுத்தத்தைச் சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆன்லைன் வர்த்தக நிறுவனமான என்ரிச் மணி நிறுவனத்தின் (Enrich Money) தலைமைச் செயலதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், உள்நாட்டுப் பங்குச்சந்தைகளுக்குக் கச்சா எண்ணெய் விலை உயர்வே தற்போதைய உடனடி அச்சுறுத்தலாக மாறியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அமெரிக்கா – ஈரான் ராணுவத் மோதல்கள் காரணமாக கடந்த இரண்டு அமர்வுகளில் டபிள்யூடிஐ (WTI) கச்சா எண்ணெய் 8 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாகவும், இது எரிசக்தி விநியோகத்தில் தடையை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தை மீண்டும் ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

அமெரிக்கா – ஈரான் மோதல் தீவிரமடைந்துள்ளதால் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை ஒரே இரவில் 5 சதவீதம் அதிகரித்து 96 டாலரை எட்டியுள்ளது முதலீட்டாளர்கள் மத்தியில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆசிய சந்தைகளைப் பொறுத்தவரையில், தென் கொரியாவின் கோஸ்பி (Kospi) 3 சதவீதத்திற்கும் அதிகமாகவும், ஜப்பானின் நிக்கி 225 (Nikkei 225) குறியீடு கிட்டத்தட்ட 3 சதவீதமும் சரிந்தன. ஷாங்காய் எஸ்எஸ்இ கூட்டுக்குறியீடு மற்றும் ஹாங்கூங்கின் ஹங் செங் குறியீடுகளும் சரிவுடனேயே வர்த்தகமாயின.

அமெரிக்கச் சந்தைகள் சரிவு!

எரிசக்தி விலை உயர்வு மற்றும் கடன் பத்திரங்களின் லாபமீட்டல் அதிகரிப்பு ஆகியவை கடுமையான பணவியல் கொள்கைகள் வரக்கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியதால் நேற்று வால்ஸ்ட்ரீட் சந்தைகள் சரிவுடன் முடிவடைந்தன. எஸ் அண்ட் பி 500 (S&P 500) 0.7 சதவீதமும், டோவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரி 0.8 சதவீதமும், நாஸ்டாக் 1 சதவீதமும் சரிந்தன. அமெரிக்காவின் 10 ஆண்டு கால கடன் பத்திர ஈவுத்தொகை 20 மாதங்களில் இல்லாத அளவுக்கு சுமார் 4.79 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதிகரித்து வரும் எரிசக்தி செலவுகள் மற்றும் உலகளாவிய கடன் பத்திர விற்பனை ஆகியவற்றின் தாக்கத்தை முதலீட்டாளர்கள் மறுபரிசீலனை செய்து வருவதால் ஆசிய சந்தைகள் வால்ஸ்ட்ரீட்டின் பாதையைப் பின்பற்றி சரிவைச் சந்தித்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

பரிமாற்றத் தரவுகளின்படி, வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FIIs) நேற்று (செப்டம்பர் 1) ரூ. 1,143.38 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர். மறுபுறம், உலகளாவிய எண்ணெய் தரநிலையான பிரென்ட் கச்சா எண்ணெய் 0.76 சதவீதம் உயர்ந்து ஒரு பேரல் 95.37 டாலராக வர்த்தகமானது.

Source link