இன்றைய தினம் சட்டப்பேரவைக்கு வருகை தந்த தவெக எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் , சிஎம் விஜய்தான் அடுத்த பிரதமர் என திட்டவட்டமாக தெரிவித்தார். அதோடு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியே, விஜய்யின் கையை பிடித்து பிரதமர் நாற்காலியில் அமர வைப்பார் என கருத்துக்களை பகிர்ந்தார். அவருடைய இந்த பேச்சு காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்களை கடுமையாக அதிருப்தி அடைய வைத்துள்ளது. அதோடு இவ்விவகாரம் கூட்டணிக்குள் கடுமையான புகைச்சலை ஏற்படுத்தியுள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
இப்படியான நிலையில் தவெக எம்எல்ஏ கனிமொழி சந்தோசின் பேச்சு தொடர்பாக திமுகவை சார்ந்த பிரமுகர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள பதிவு கவனம் பெற்று கொண்டிருக்கிறது. அதாவது தேர்தல் கணிப்பாளர் ஒருவர் தனது எக்ஸ் தளத்தில் எம்எல்ஏ கனிமொழியின் பேச்சினை பகிர்ந்து, பிரதமராக வேண்டும் என்ற லட்சியத்தில் விஜய் உறுதியாக இருந்தால் அவர் முதலில் சட்டப்பேரவையை கலைக்க வேண்டும்.
மீண்டும் தனிப்பெரும்பான்மை பெற்று புதிதாக ஆட்சி அமைக்க வேண்டும். காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ஆதரவுடன் ஒரு அரசை நடத்திக்கொண்டு, தன்னை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதில் எந்த பெரிய அர்த்தமும் இல்லை என கருத்து தெரிவித்துள்ளார். அதோடு திமுக, பாஜக ஆகிய கட்சியை குழப்புதற்கான ஒரு முயற்சியாகவே பிரதமர் வேட்பாளர் விஜய் என்ற பிரச்சாராத்தை தவெகவினர் செய்வதாக தோன்றுவதாகவும் அவர் தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அதோடு காங்கிரஸ் உடனான கூட்டணியை தவெக முறித்துக் கொள்ளும் என்பதை போன்று ஒரு பொய்யான நம்பிக்கையை பிற கட்சிகளுக்கு அளிப்பதாகவும் இது அமைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவரின் இந்த பதிவு குறித்து திமுகவின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை தனது சமூக வளைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார்.
அதில், 2014 தேர்தலில் செல்வி ஜெயலலிதா தன்னை எவ்வாறு முன்னிறுத்திக் கொண்டாரோ, அதே போன்று தவெக 2029 தேர்தலுக்காக தனை தயார் படுத்தி வருகிறது. கூட்டணி கட்சிகளை விடவும் ‘விஜய்’ என்கிற பிம்பத்தின் மீதே அவர்கள் அதீத நம்பிக்கை கொண்டுள்ளார். தவெக உடனான கூட்டணியை முறித்துக் கொள்ளும் துணிச்சல் காங்கிரஸ் கட்சிக்கு கிடையாது. ஒருவேளை காங்கிரஸ் கட்சி அதனை பற்றி சற்றே யோசித்தால் கூட, அக்கட்சியை சார்ந்த ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களின் நிலைப்பாட்டினை உடனடியாக மாற்றிக்கொண்டு பக்கம் மாறி விடுவார்கள்.
