இந்தியாவில் யூபிஐ பரிவர்த்தனைகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. சென்ற ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் யூபிஐ டிஜிட்டல் பணப்பரிமாற்றம் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான மக்கள் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தியுள்ளனர். பரிமாற்றங்களின் மொத்த மதிப்பு சாதனை அளவை நெருங்கியுள்ள நிலையில், பரிமாற்றங்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இந்திய
தேசிய கொடுப்பனவுக் கழகம் ( NPCI ) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஆகஸ்ட் மாதத்தில் யூபிஐ மூலம் 24.51 ஆயிரம் கோடி பரிமாற்றங்கள் நடந்துள்ளன. இவற்றுள் பரிமாற்றப்பட்ட தொகையின் மதிப்பு ரூ. 29.82 லட்சம் கோடியாகும்.
யூபிஐ பரிமாற்ற அளவு புதிய சாதனை!
முன்னதாக, ஜூலை மாதத்தில் 23.66 கோடியாக இருந்த யூபிஐ பரிமாற்றங்களின் எண்ணிக்கை ஆகஸ்ட் மாதத்தில் 24.51 பில்லியனாக உயர்ந்து சாதனை படைத்துள்ளது. ஜூன் மாதத்தில் பரிமாற்ற அளவு 22.72 பில்லியனாகவும், மே மாதத்தில் 23.2 பில்லியனாகவும் இருந்தது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் பதிவான 19.63 பில்லியன் பரிமாற்றங்களுடன் ஒப்பிடும்போது, ஆகஸ்ட் மாத எண்ணிக்கை 22 சதவீதம் அதிகமாகும். தனிநபர் பரிமாற்றங்கள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் தினசரி கொடுப்பனவுகளுக்கு யூபிஐ எவ்வாறு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதை இந்த உயர்வு காட்டுகிறது.
பரிமாற்ற மதிப்பின் அடிப்படையில், ஆகஸ்ட் மாதத்தில் யூபிஐ பரிமாற்றங்கள் ரூ. 29.82 லட்சம் கோடியாக இருந்தது. இது கடந்த மே மற்றும் ஜூலை மாதம் பதிவான சாதனை அளவான ரூ. 29.9 லட்சம் கோடியை விட சற்று குறைவாகும். இருப்பினும், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பதிவான ரூ. 24.85 லட்சம் கோடியை விட இந்த மாதத்தின் மதிப்பு அதிகமாகும். இது சுமார் 20 சதவீத ஆண்டு வளர்ச்சியைக் குறிக்கிறது. பரிமாற்றங்களின் மதிப்பில் புதிய சாதனை படைக்கப்படவில்லை என்றாலும், யூபிஐ மூலம் மேற்கொள்ளப்பட்ட கட்டணங்களின் எண்ணிக்கை புதிய சாதனை படைத்துள்ளது.
பண்டிகை காலத்தில் யூபிஐ வளர்ச்சிக்கு உத்வேகம்!
ரக்ஷா பந்தன் போன்ற பண்டிகைக் கால நடவடிக்கைகள் பரிமாற்ற அளவுகளின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியுள்ளன. இது தினசரி நபர்-நபர் (peer-to-peer) பரிமாற்றங்கள் மற்றும் சிறிய மதிப்புடைய பரிசுப் பரிமாற்றங்களை அதிகரிக்கச் செய்துள்ளது. மேலும், ஷாப்பிங், பரிசுகள் மற்றும் பிற செலவுகளுக்கு அதிகமான மக்கள் டிஜிட்டல் கட்டணங்களை நாடுவதுடன், வரவிருக்கும் பண்டிகைக் காலம் யூபிஐக்கு மேலும் ஊக்கமளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், இந்தியாவின் எல்லைகளையும் தாண்டி யுபிஐ தனது சேவையை விரிவுபடுத்தி வருகிறது. தற்போது உஸ்பெகிஸ்தான் நாடும் இச்சேவையை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் மொத்தம் 11 நாடுகளில் யூபிஐ வசதி விரிவடைந்துள்ளது. சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரான்ஸ், மொரிஷியஸ், நேபாளம், பூடான், கத்தார், இலங்கை, கம்போடியா மற்றும் கிரீஸ் ஆகியவை யுபிஐ ஏற்றுக்கொள்ளப்படும் பிற நாடுகளாகும்.
யூபிஐ கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 அன்று தொடங்கப்பட்டது. இது இந்தியாவில் மக்கள் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் முறையை முற்றிலுமாக மாற்றி அமைத்துள்ளது. NPCI தரவுகளின்படி, யூபிஐ பரிமாற்றங்களின் மதிப்பு 2017 நிதியாண்டில் ரூ. 0.07 லட்சம் கோடியிலிருந்து 2026 நிதியாண்டில் சுமார் ரூ. 314 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது பத்தாண்டுகளில் பரிமாற்ற மதிப்பில் 4,000 மடங்குகளுக்கும் அதிகமான வளர்ச்சியைக் குறிக்கிறது. பரிமாற்ற அளவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாலும், பண்டிகைக் காலம் நெருங்கி வருவதாலும், இந்தியாவின் டிஜிட்டல் கட்டணச் சூழலில் யுபிஐ தொடர்ந்து முக்கியப் பங்கு வகிக்கத் தயாராக உள்ளது என்று தெரிகிறது.
