தமிழக வெற்றிக் கழகம் 2024ஆம் ஆண்டு நடிகர் விஜயால் தொடங்கப்பட்டது. விஜய் என்ற ஒற்றை முகத்தை முன்னிறுத்தியே அரசியல் களத்தில் கால் பதித்த தவெக, 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பெற்றது. கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்த திராவிட கட்சிகளுக்கு மாற்று சக்தியாக விஜய் உருவெடுத்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். ஆட்சி அமைத்து 100 நாட்கள் கடந்த நிலையிலும், விஜய் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையும் ஆதரவும் தொடர்வதாகவும் கூறப்படுகிறது.
108 இடங்களில் வெற்றி.. 144 ஆக உயர்ந்த ஆதரவு
2026 தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மை பெற்ற மிகப்பெரிய தனிக்கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்பட்ட நிலையில், திமுக தனது மதச்சார்பற்ற கூட்டணியில் இடம்பெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ், இடதுசாரிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவை நாடியது.
இதற்கிடையே அதிமுக தேர்தல் தோல்விக்கு எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் ஆகியோர் தலைமையில் அதிமுகவுக்குள் அதிருப்தி அலை உருவானதாக கூறப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சுமார் 25 அதிமுக எம்எல்ஏக்கள் தனி அணியாக பிரிந்து சட்டப்பேரவையில் செயல்படத் தொடங்கினர்.
மேலும், அதிமுக கொறடா உத்தரவை மீறி அந்த 25 எம்எல்ஏக்களும் தவெக அரசுக்கு ஆதரவளித்ததாக கூறப்படுகிறது. இதன் மூலம் சட்டப்பேரவையில் தவெக அரசுக்கு கிடைத்த ஆதரவு 144 ஆக உயர்ந்தது.
ஆறு எம்எல்ஏக்கள் ராஜினாமா.. தவெகவில் இணைவு
இதன் தொடர்ச்சியாக அதிமுகவைச் சேர்ந்த சி. விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா உள்ளிட்ட ஆறு எம்எல்ஏக்கள்தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். அதிமுகவில் இருந்து பிரிந்து வந்த இந்த எம்எல்ஏக்களுக்கு தவெகவில் உரிய அங்கீகாரம் மற்றும் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் உருவானது.
எதிர்பார்த்தபடியே ஆறு பேருக்கும் கட்சியில் பதவிகள் வழங்கப்பட்டாலும், தாங்கள் எதிர்பார்த்த அளவிலான பொறுப்புகள் கிடைக்கவில்லை என்ற அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அஜித் ரசிகர்களுக்கு வலை போடும் அரசியல் கட்சிகள்!
“விஜய் மக்கள் இயக்கத்தினருக்கே முன்னுரிமை” – தவெக நிர்வாகிகள்
இந்த விவகாரம் தொடர்பாக விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து தமிழக வெற்றிக் கழகம் வரை பயணித்த சில தொண்டர்களிடம் பேசுகையில், “விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து வந்தவர்களுக்குத்தான் தவெகவில் எப்போதும் முன்னுரிமை. அதுதான் தளபதியின் நிலைப்பாடு. அதில் தலைவர் மாறமாட்டார்.
அதிமுகவில் இருந்து வந்த நிர்வாகிகளுக்கு அவர்களது அனுபவத்துக்கு ஏற்ற பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் திமுகவில் இருப்பது போல, கட்சிக்கு வந்த உடனேயே அமைச்சர் அல்லது எம்எல்ஏ பதவி வழங்க முடியாது. நீண்ட காலமாக தவெகவுக்கு விசுவாசமாக செயல்பட்டு வரும் நிர்வாகிகளுக்குத்தான் முன்னுரிமை” எனத் தெரிவித்தனர்.
இசக்கி சுப்பையாவின் கோரிக்கை ?
இதற்கிடையே, இசக்கி சுப்பையா தவெக தொண்டராகவே தொடர விரும்புவதாகவும், ஆனால் தனது வழக்கு முடியும் வரை சட்டமன்ற உறுப்பினராக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும் நூதனமான கோரிக்கை வைத்துள்ளார்.
தன்னிச்சையாக தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து இடைத்தேர்தலுக்கு வழிவகுத்துவிட்டு, தற்போது மீண்டும் எம்எல்ஏவாக தொடர கோருவது எப்படி சாத்தியம் என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.
இந்நிலையில், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் தவெகவை சுற்றி வரும் சூழலில், இந்த அரசியல் நெருக்கடியை எடப்பாடி பழனிசாமி எப்படி கையாளப் போகிறார் என்பதே அடுத்த முக்கியக் கேள்வியாக உருவெடுத்துள்ளது.
