பங்குனி மாதத்தில் வரும் மிக முக்கியமான சிறப்புக்குரிய நாள் பங்குனி உத்திரம்.
ஒவ்வொரு மாதமும் வரும் பவுர்ணமி நாள் முருகப் பெருமான் மற்றும் சிவபெருமானுடன் தொடர்புடைய வழிபாட்டு நாளாக கருதப்படுகிறது. ஆனால் பங்குனி மாத பவுர்ணமியான பங்குனி உத்திர தினம் முருகப் பெருமானுடன் அனைத்து தெய்வங்களையும் வழிபடுவதற்கு ஏற்ற நாள் ஆகும்.
பங்குனி மாதத்தில் பவுர்ணமியும் உத்திரம் நட்சத்திரமும் இணைந்து வரும் நாளில் இந்த உற்சவம் கொண்டாடப்படுகிறது. முருகப்பெருமான் இந்திரனின் மகளான தெய்வானையை திருமணம் செய்து கொண்டது இந்த நாளில் தான்.
முருகப்பெருமான் மட்டுமின்றி சிவன்-பார்வதி, ஸ்ரீராமர்- சீதை, ரங்கநாதர்-ஆண்டாள் என பல தெய்வீக திருமணங்கள் நடைபெற்றது பங்குனி உத்திரம் அன்று தான். இந்த நாளில் விரதம் இருந்து வழிபட்டால் திருமண வரம் கிடைக்கும் என்பதால் தான் பங்குனி உத்திர விரதத்திற்கு கல்யாண விரதம் என்ற பெயரும் உண்டு.
பங்குனி உத்திரத்தன்று முருகப் பெருமானின் அறுபடை வீடுகளிலும் காவடி, பால்குடம் ஏந்தி வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். இந்த நாளில் விரதம் இருந்து வழிபட்டால் திருமண வாழ்க்கையில் இருக்கும் தடைகள் நீங்கி, நல்ல வாழ்க்கை துணை அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. பங்குனி உத்திர விரதம் மேற்கொள்வதால் அரசு வேலை, பதவி உயர்வு போன்ற நன்மைகளும் கிடைக்கும்.
