2026 சட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தீவிரமாக பரப்புரையில் இறங்கியுள்ளன. இதனிடையே, தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கி இருக்கிறது. விடுமுறை நாட்கள் போக வேட்புமனு தாக்கல் செய்ய 4 நாட்களே இருப்பதால் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதேபோல் பிரச்சாரத்திலும் தீவிரம் காட்டி வருகின்றனர்.
நேற்று பரப்புரையை தொடங்கிய நிலையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனுத் தாக்கல் செய்த பிறகு அவர் மேற்கொண்ட தேர்தல் பரப்புரையின் போது, அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக எண்ணிக்கையிலான ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தியதாகப் புகார் எழுந்தது.
அதாவது 5 ஒலிபெருக்கிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், சுமார் 30 ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தியதாகவும், பிரச்சாரத்தின் போது பொதுப் பாதையைப் பயன்படுத்துதல், ஆம்புலன்ஸ் செல்லும் பாதையை மறைத்தல் உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி தேர்தல் நிலை கண்காணிப்புக் குழு அதிகாரி புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் விஜய் உள்ளிட்ட 500 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் பெரவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் சற்று நேரத்திற்கு முன்பு சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா படநாயக் பேசுகையில், ”பெரம்பூர் மற்றும் கொளத்தூரில் நேற்று விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட பொழுது என்ன நடந்தது என்று மாவட்ட தேர்தல் அதிகாரி குமரகுருபரன் ஐஏஎஸ் இடம் விளக்கம் கேட்டு இருப்பதாகவும், அடுத்த கட்டமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், டிஜிபிக்கு கடிதம் மூலம் எந்த சூழலில் வழக்கு பதிவு செய்யப்பட்டது என முழு விளக்கம் கேட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார்.
