காட்பாடி: வி .சி., கட்சி மாவட்ட செயலரை, பிரசார வேனில் இருந்து கீழே இறங்குமாறு அமைச்சர் துரைமுருகன் கூறியது, அக்கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
வேலுார் மாவட்டம், காட்பாடி தொகுதியில், தி.மு.க., சார்பில் அமைச்சர் துரைமுருகன் போட்டியிடுகிறார். தேர்தல் பிரசாரத்தை துவங்கியுள்ள அவர், காட்பாடியில் நேற்று ஓட்டு கேட்டு சென்றபோது, பிரசார வேனில், வி.சி.க., வேலுார் மாநகர் மாவட்ட செயலர் பிலிப் ஏறினார். உடனே அவரிடம், ‘வேனில் ஏறாதே, இறங்கு’ என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். இதனால், வி.சி., கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அவர்கள் கூறுகையில், ‘கடந்த தேர்தல்களில், பிற சமூக மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சென்றபோது, பிரசார வேனில், வி.சி., கட்சி கொடியை கழற்றிவிட்டு தான் தி.மு.க.,வினர் பிரசாரம் செய்தனர். சுவர் விளம்பரங்களிலும், எங்கள் கட்சி தலைவர் பெயரை தவிர்த்தனர். இப்போது, வேனில் இருந்து இறங்கும்படி கூறியுள்ளார் அமைச்சர். இது எங்கள் கட்சியை அவமதிப்பதற்கு சமம்’ என்றனர்.
நடந்த சம்பவம் குறித்து, வி.சி., கட்சியின் வேலுார் மாநகர் மாவட்ட செயலர் பிலிப்பிடம் கேட்டபோது, “யதேச்சையாக கூட, அமைச்சர் துரைமுருகன் இறங்க சொல்லியிருக்கலாம். ஆனால், இந்த சம்பவத்தால், வி.சி.க., தொண்டர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்,” என்றார்.
