– நமது நிருபர் –
முதல்வர் ஸ்டாலின், தனது வேட்பு மனுவை நேற்று முன்தினம் தாக்கல் செய்து விட்டு, கூட்டணி கட்சியினருக்கு தேநீர் விருந்து வைத்து உபசரித்தார்.
அங்கு வந்திருந்த வி.சி.க., தலைவர் திருமாவளவனிடம், ‘எம்.பி.,யாக இருக்கும் நீங்கள் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது, பார்லிமென்டில் ‘இண்டி’ கூட்டணியின் பலத்தை குறைத்துவிடும். நீங்கள் மறுபரிசீலனை செய்யுங்கள்’ என, ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
அதற்கு, ‘தலித் மக்கள் மத்தியில் விஜய்க்கான ஈர்ப்பு அதிகமாக இருக்கிறது. நானே களம் இறங்கினால் தான் அதை ஓரளவிற்கு சரிசெய்ய முடியும் என்று, எங்கள் கட்சிக்காரர்கள் சொல்கின்றனர். நானும் போட்டியிட்டால் தான், வி.சி.க.,வின் மற்ற வேட்பாளர்களும் வெல்ல வாய்ப்பு ஏற்படும் என நினைக்கின்றனர். அதனால், நான் இந்த முறை போட்டியிட்டே ஆக வேண்டும். இது எங்கள் கட்சி எதிர்காலம் சம்பந்தப்பட்டது’ என்று சொல்லி, ஸ்டாலினை திருமாவளவன் சமாதானப்படுத்தினார்.
முதல்வர் ஸ்டாலின் வரையில் கவலை ஏற்படுத்தியுள்ள சிதம்பரம் லோக்சபா எம்.பி.,யும் வி.சி., கட்சி தலைவருமான திருமாவளவனின் முடிவுக்கு பின்னால், ஸ்டாலினிடம் சொன்ன காரணம் தவிர, பல அடுக்கு காரணங்கள் இருப்பதாக வி.சி.க.,வினர் கூறுகின்றனர்.
காரணம் 1
தற்போதுள்ள வி.சி.க.,வின் நான்கு எம்.எல்.ஏ.,க்களில் மூவர், கட்சிக்கு காட்டிய விசுவாசத்தை விட தி.மு.க.,வுக்கு காட்டிய விசுவாசமே அதிகம். சட்டசபையில் பட்டியலின மக்களுக்கான பிரச்னையை வலுவாக எடுத்துரைக்காமல், தி.மு.க.,வுக்கு புகழ் பாடுவதிலேயே கவனமாக இருந்துள்ளனர். வி.சி.க., கொடிக்கம்பம் கூட நட முடியாத நிலை ஏற்பட்டபோது , அந்த மூன்று எம்.எல்.ஏ.,க்களும் தி.மு.க., அரசுக்கு நெருக்கடி கொடுக்கவில்லை. வேங்கைவயல் விஷயத்திலும் சட்டசபையில் அழுத்தம் கொடுக்கவில்லை. அவர்களால் கட்சியினருக்கு எந்த நன்மையும் இல்லை என, தொண்டர்களும் நிர்வாகிகளும் ஏராளமான புகார்களை தெரிவித்தனர்.
வி.சி.க.,வில் வேட்பாளர் தேர்வின் போது, மூன்று எம்.எல்.ஏ.,க்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கும்படி, தி.மு.க., அமைச்சர்கள் சிபாரிசு செய்தனர். அதனாலேயே, தன் மொபைல் போனை சில நாட்கள் அணைத்துவிட்டார் திருமாவளவன். அவர்கள் மீதான கோபத்தை, சிபாரிசு விவகாரம் உச்சத்திற்கு தள்ளியது. எக்காரணம் கொண்டும் அந்த மூன்று எம்.எல்.ஏ.,க்களுக்கு சீட் வழங்க மறுத்துவிட்டார். காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ.,வாக உள்ள சிந்தனைசெல்வன் மட்டும் இதில் விதிவிலக்கு.
எம்.எல்.ஏ .,க்களை போல், வி.சி.க., முக்கிய நிர்வாகிகள் பலர், தி.மு.க., தலைமையுடன் நெருக்கமாக உள்ளனர். கட்சியின உயர்மட்ட கூட்டங்களில் எடுக்கப்படும் முடிவுகளையும், தி.மு.க., தலைமைக்கு தெரிவித்தபடி உள்ளனர். இந்த விபரங்கள் தெரிந்தும், அவர்கள் மீது திருமாவளவனால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை.
இதே நிலை அடுத்த சட்டசபையிலும் நீடித்தால், கட்சி வளர்ச்சி கைவிட்டு போய்விடும் என்று கணித்த திருமாவளவன், தானே சட்டசபைக்கு போய், எம்.எல்.ஏ.,க்களை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார். நம்பகமான ஆள் தேவை என்பதற்காக தான், கள்ளக்குறிச்சியில் தனது அக்கா மகள் மாலதியை நிறுத்தியுள்ளார்.
காரணம் 2
தொகுதி பங்கீடு பேச்சின் போது, தி.மு.க., மூத்த நிர்வாகிகள் நடந்து கொண்ட விதமும், திருமாவளவனை கடும் அதிருப்தி அடைய வைத்தது.
அ.தி.மு.க., கூட்டணியில் புரட்சி பாரதம் போட்டியிடும் கே.வி.குப்பம் தொகுதியை, வி.சி.க., எடுத்துக்கொள்ள வேண்டும் என தி.மு.க., வற்புறுத்தியது. ‘பட்டியலின மக்களிடையே மோதலை ஏற்படுத்த முயற்சிக்கிறீர்களா’ என, கடும் கோபத்துடன் அதை மறுத்தார் திருமாவளவன்.
அதுபோல, திருப்போரூ ர் தொகுதிக்கு பதிலாக வேறு தொகுதியை கேட்டபோது, அங்கு, பா.ம.க., தலைவர் அன்புமணி மனைவி சவுமி யா போட்டியிடப் போவதாக சொல்லி, வலுக்கட்டாயமாக வி.சி.க.,விடம் தி.மு.க., திணித்தது. இப்படி பல
தொகுதிகளில் வி.சி.க.,வை தி.மு.க., கட்டாயப்படுத்தியது.
இரட்டை இலக்க தொகுதிகளையும் தராமல், விரும்பாத தொகுதிகளையும் திணித்ததில், தன்னுடன் வேண்டா வெறுப்பாக தி.மு.க., கூட்டணி வைத்திருப்பது போல் உணர்ந்தார் திருமாவளவன்.
சில தொகுதிகளை அவர் விரும்பி கேட்டபோது, குறிப்பிட்ட வி.சி.க., – எம்.எல்.ஏ.,க்களின் பெயரைச் சொல்லி, ‘இதை அவர் விரும்பமாட்டார். வேறு கேளுங்கள்’ என்று தி.மு.க.,வினர் சொல்ல, திருமாவளவனுக்கு அவமானமாகிவிட்டது. அதாவது, தன் கட்சி மீது தனக்கு கட்டுப்பாடு இல்லை என்பதை தி.மு.க., குத்திக் காண்பிப்பது போல் ஆகிவிட்டது. ஏற்கனவே, எம்.எல்.ஏ.,க்களை கட்டுப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த அவரது முடிவை இன்னும் வலுவாக்கியது.
காரணம் 3
கடந்த லோக்சபா தேர்தலுக்குப் பின், ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்பதை, காங்கிரஸ் மட்டுமல்லாது வி.சி.க.,வும் வலியுறுத்தி வருகிறது. கடந்த மாதம் முழுதும் இது தான் தி.மு.க., கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி வந்தது. ஆட்சியில் பங்கு இல்லாத போது, எவ்வளவு எம்.எல்.ஏ.,க்கள் இருந்தாலும் அவர்கள் தி.மு.க., விசுவாசிகளாக மாறிவிடுகின்றனர். அதே நேரம், கட்சி வளர்ச்சி மிகவும் சிரமமாகிவிடுகிறது என்பதை இரு கட்சிகளுமே உணர்ந்துள்ளன. ‘ஆட்சியில் பங்கு தமிழகத்திற்கு சரிவராது’ என, முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக கூறி விட்டார்.
இருப்பினும், இந்த தேர்தலில், விஜயின் வருகை மற்றும் நான்கு முனை போட்டி ஏற்பட்டுள்ளதால், தொங்கு சட்டசபைக்கான வாய்ப்பு அதிகரித்து இருப்பதை அனைத்து கட்சிகளுமே கணித்துள்ளன. அப்படி வரும்போது, ஆட்சியில் பங்கு கேட்க வாய்ப்பு அமையும். அந்த நேரம் தன்னிடம், 6 – -7 எம்.எல்.ஏ.,க்கள் இருந்தால், அமைச்சர் அல்லது துணை முதல்வர் பதவிக்கு வாய்ப்பு உருவாகும் என்பது திருமாவளவனின் கணக்கு. அதனால் தான், ‘தேர்தலுக்கு பின் நிலைமைகள் மாறும். அதற்காகத்தான் தேர்தலில் போட்டி’ என திரும்பத் திரும்ப சொல்லி வருகிறார். அவர் இப்படி சொல்வதன் பின்னணியில், த.வெ.க.,வின் தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனாவின் வலியுறுத்தல்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
