சமீப காலமாகவே தவெக, காங்கிரஸ் கூட்டணிக்குள் அதிருப்தி நிலவுவதாக அரசியல் வட்டாரத்தில் கருத்துக்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இதனை உறுதி செய்யும் விதமாக பிரதமர் வேட்பாளர் குறித்து தவெக, காங்கிரஸ் கட்சியினர் மாறுப்பட்ட கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இதனையடுத்து காங்கிரஸை கூட்டணியில் இருந்து கழட்டி விடுவதற்கு தவெக தயாராகி விட்டதாக அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டு கொண்டிருக்கிறது.
பிரதமர் வேட்பாளர் தொடர்பான விவாதம்
தவெக ஆட்சி அமைப்பதற்கு முதல் ஆளாக ஆதரவு அளித்த கட்சி காங்கிரஸ். தொடர்ந்து இனிவரும் தேர்தல்களிலும் தவெகவுடன் கூட்டணியில் பயணிப்போம் எனவும் காங்கிரஸ் அறிவிப்பினை வெளியிட்டது. இப்படியான நிலையில் ராகுல் காந்திதான் அடுத்த பிரதமர் என காங்கிரஸார் பேசி வரும் நிலையில், சிஎம் விஜய்தான் அடுத்த பிரதமர் வேட்பாளர் என்று தவெக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருக்கின்றனர். இதனால் தமிழக காங்கிரஸ் அதிருப்தி அடைந்துள்ள நிலையில், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் பதவியை ராஜினாமா செய்வோம் என அமைச்சர் ராஜேஷ்குமார் சமீபத்தில் பேசினார்.
தவெக – காங்கிரஸ்
இதனை தொடர்ந்து காங்கிரஸை கழட்டி விடுவதற்கு தவெக தயாராகி விட்டதாக அரசியல் வட்டாரத்தில் கருத்துக்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியை தவெக கைவிடுவதற்கு வாய்ப்பில்லை என தேர்தல் கணிப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ள கருத்து கவனம் பெற்று வருகிறது. இது சம்பந்தமாக அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், காங்கிரஸை கழட்டி விடாது தவெக. ஏனென்றால் அப்படி நடந்தால் விசிக, கம்யூனிஸ்ட் மற்றும் ஐயூஎம்எல் கட்சிகளையும் தவெக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியில் கொண்டு வந்துவிடும்.
மீண்டும் உருவாகும் திமுக கூட்டணி
அதனை தொடர்ந்து அனைத்து கட்சிகளும் திமுகவுடன் இணைந்து விடும். இதனால் திமுக கூட்டணி மீண்டும் உருவாகும். இதனை தவெக விரும்பாது என அவர் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். மேலும் தவெக, காங்கிரஸ் கூட்டணி பிரிவதை போன்று ஒரு தோற்றம் உருவாக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். அவருடைய இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்று கொண்டிருக்கிறது. அதோடு அவரின் இந்த பதிவுக்கு பல கமெண்ட்களும் குவிந்து வருகிறது.
முன்னதாக சட்டமன்ற தேர்தலுக்கு பின்பாக தவெகவுக்கு முதல் ஆளாக ஆதரவு அளித்த காங்கிரஸ், பிற கட்சிகளிடமும் தவெகவிற்கு ஆதரவு அளிப்பதற்காக பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்பட்டது. குறிப்பாக ஐயூஎம்எல் கட்சி திமுக கூட்டணியிலே தாங்கள் நீடிப்பதாக திட்டவட்டமாக தெரிவித்த நிலையில், திடீரென தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தது. இதற்கு பின்னணியிலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இருந்ததாக தகவல்கள் வெளியானது.
தவெக கூட்டணி கட்சிகளின் கூட்டம்
இதனால் தவெக கூட்டணியில் இருந்து காங்கிரஸை வெளியேற்றினால், பிற கட்சிகளும் வெளியில் வந்துவிடும் என தேர்தல் கணிப்பாளர் தெரிவித்துள்ள கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தவெக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக ஆதரவு கட்சி தலைவர்களுக்கு தவெக அமைச்சர்கள் நேரில் அழைப்பு விடுத்து வருகின்றனர்.
காங்கிரஸ் இல் LOBBY! அமைச்சர் ஆகப்போவது யார்?
மாணிக்கம் தாகூர்
அந்த வகையில் இன்றைய தினம் காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர், எம்பி பிரவீன் சக்கரவர்த்தி உள்ளிட்டோரை அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர். அப்போதும் செய்தியாளர்கள் அமைச்சர்களிடம் பிரதமர் வேட்பாளர் தொடர்பாக கேள்வி எழுப்பினார்கள். இதனிடையில் காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர், ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர். இதில் பேசுவதற்கு ஒன்றும் இல்லை என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
