தமிழக சட்டமன்றத்தில் ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கும், எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் இடையே ஏற்பட்டுள்ள கடுமையான மோதலால், அவை தற்பொழுது அரசியல் போர்க்களமாக மாறியுள்ளது.
சமூக ஊடகங்களில் இடும்பாவனம் கார்த்திக் வெளியிட்ட ஒரு எக்ஸ் பதிவு இந்த விவாதத்தை மேலும் சூடாக்கியுள்ளது. அதில், நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரில் பொறுப்புணர்வுக்குப் பயந்து முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பின்வாங்குவதாக அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சர்ச்சையின் மையப்புள்ளி: ரத்து செய்யப்பட்ட கேள்வி நேரம்
திங்கட்கிழமை நடைபெறவுள்ள சட்டமன்ற நிகழ்வுகளில் கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறித்து இடும்பாவனம் கார்த்திக் எழுப்பியுள்ள குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவரின் பதிவு விவரம் பின்வருமாறு,
திங்கள் கிழமை சட்டமன்ற நிகழ்வில் எதற்காகக் கேள்வி நேரம் ரத்து செய்யப்படுகிறது?
Script Paperயை வாசிக்கும் முதல்வர் விஜய்யிடம் எதிர்க்கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் கேள்வி கேட்டுவிடக்கூடாது என்பதாலா?
மூன்று நாட்கள் கழித்துப் பதில் சொல்கிறேன் பேர்வழி என சட்டமன்றத்தைவிட்டு ஓடுவதும், கேள்விநேரத்தை ரத்து செய்துவிட்டு, பதில் சொல்கிறேன் என்பதுமாக விஜய் செய்வதெல்லாம் அப்பட்டமான கோழைத்தனம்!
எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு
புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜய், அனுபவம் வாய்ந்த எதிர்க்கட்சித் தலைவர்களின் நேரடி மற்றும் எழுதப்படாத கேள்விகளை எதிர்கொள்வதைத் தவிர்ப்பப்பதற்காகவே தவெக அரசு இந்த உத்தியைக் கையாளுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
சட்டமன்ற அரசியல் நகர்வுகள்
சட்டமன்றத்தில் கடந்த சில நாட்களாக நடந்து வரும் அரசியல் நகர்வுகளைக் கவனித்தால் இந்த மோதலின் தீவிரம் புரியும்.
விஜய்யின் அதிரடி அறிவிப்பு-முதலமைச்சர் விஜய் விதி 110-ன் கீழ், முந்தைய அரசின் சுமார் ₹27,400 கோடி மதிப்பிலான பரந்தூர் பசுமை வழி விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்தார். இது முந்தைய ஆளுங்கட்சியான திமுகவிற்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
எதிர்க்கட்சியின் தாக்குதல்: இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தில் அதிகரித்து வரும் குற்றச் சம்பவங்கள் மற்றும் போக்சோ வழக்குகளைக் குறிப்பிட்டு தவெக அரசின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக அவையில் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
முதலமைச்சரின் சவால்: இந்த விமர்சனங்களுக்கு உடனடியாகப் பதிலளிக்காமல், “திங்கட்கிழமை அவைக்கு வந்து சட்டம் ஒழுங்கு குறித்து புள்ளிவிவரங்களுடன் விரிவான விளக்கத்தை அளிக்கிறேன்; அப்போது எதிர்க்கட்சிகள் அவையை விட்டு ஓடாமல் இருந்து கேட்க வேண்டும்” என்று முதலமைச்சர் விஜய் சவால் விடுத்திருந்தார்.
