ஃபோர்ஸ் மோட்டார் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்களுக்கு ஈவுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான தொகை மற்றும் தேதி இதுதான். நோட் பண்ணிக்கோங்க.
இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான ஃபோர்ஸ் மோட்டார்ஸ் ( Force Motors ) தனது பங்குதாரர்களுக்கு ஒரு பங்கிற்கு ரூ. 50 ஈவுத்தொகை யை (dividend) வழங்கவுள்ளது. இந்த ஈவுத்தொகையைப் பெறுவதற்கு முதலீட்டாளர்களுக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. முந்தைய நிதியாண்டிற்கான நிதி முடிவுகள் அறிவிக்கப்பட்ட அதே வேளையில், 2025-26 நிதியாண்டிற்கான இந்த ஈவுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் ரூ. 40 ஈவுத்தொகை!
ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் ரூ. 10 முகமதிப்பு கொண்ட ஒரு பங்கிற்கு ரூ. 50 (500 %) ஈவுத்தொகையை அறிவித்துள்ளது. முன்னதாக, 2024-25 நிதியாண்டில் பங்குதாரர்களுக்கு ஒரு பங்கிற்கு ரூ. 40 ஈவுத்தொகையை இந்நிறுவனம் அறிவித்திருந்தது. இந்த ரூ. 50 ஈவுத்தொகைக்கான பதிவுத் தேதியை (record date) நிறுவனம் ஏற்கனவே அறிவித்துள்ளது.
செப்டம்பர் 9 பதிவுத் தேதியாகும்!
ஃபோர்ஸ் மோட்டார்ஸ் பங்குகள் புதன்கிழமை, செப்டம்பர் 9 அன்று ‘எக்ஸ்-டிவிடெண்ட்’ (ex – dividend) அடிப்படையில் வர்த்தகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நிறுவனத்தின் பங்குகள் எக்ஸ் – டிவிடெண்ட் அடிப்படையில் வர்த்தகம் செய்யப்படும் நாளில், அன்று வாங்கப்படும் புதிய பங்குகளுக்கு ஈவுத்தொகை கிடைக்காது. ஈவுத்தொகை பலன்களைப் பெற விரும்பும் முதலீட்டாளர்கள் பதிவுத் தேதிக்கு ஒரு நாள் முன்னதாகவே பங்குகளை வாங்க வேண்டும். அதாவது, ஃபோர்ஸ் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் வழங்கும் ரூ. 50 ஈவுத்தொகையைப் பெற செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 8 வரை மட்டுமே முதலீட்டாளர்களுக்கு அவகாசம் உள்ளது.
ஃபோர்ஸ் மோட்டார்ஸ் தயாரிப்பு வரிசை!
ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் முக்கியமாக வணிக வாகனங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்கிறது. இந்த நிறுவனத்தின் தயாரிப்பு வரிசையில் டிராவலர் (Traveler), அர்பானியா (Urbania), ட்ராக்ஸ் (Trax), மோனோபஸ் (Monobus) மற்றும் குர்கா (Gurkha) ஆகியவை அடங்கும். மேலும், காவல்துறை, பள்ளிகள், வங்கிகள் மற்றும் காட்டுப் பகுதி சஃபாரிகளுக்கான (jungle safaris) சிறப்பு வாகனங்களையும் இந்நிறுவனம் தயாரிக்கிறது.
சிறிய உயர்வுடன் வர்த்தம் நிறைவு!
வெள்ளிக் கிழமையன்று பிஎஸ்இ சந்தையில் ஃபோர்ஸ் மோட்டார்ஸ் பங்குகள் 0.20 சதவீதம் (ரூ. 35.00) உயர்ந்து ரூ. 17,560.00 என்ற விலையில் வர்த்தகத்தை நிறைவு செய்தன. நேற்று வர்த்தகத்தின் போது, இந்த நிறுவனப் பங்குகள் குறைந்தபட்சமாக ரூ. 17,525.65 வரையிலும், அதிகபட்சமாக ரூ. 17,850.00 வரையிலும் சென்றன. பிஎஸ்இ சந்தையில் இந்நிறுவனப் பங்குகளின் 52 வார அதிகபட்ச விலை ரூ. 26,485.95 ஆகவும், 52 வார குறைந்தபட்ச விலை ரூ. 14,911.45 ஆகவும் உள்ளது. பிஎஸ்இ தரவுகளின்படி, ஃபோர்ஸ் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின் தற்போதைய சந்தை மூலதனம் ரூ. 22,885.77 கோடியாகும்.
Disclaimer:
இந்த செய்தி தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இது முதலீட்டுக்கான பரிந்துரை கிடையாது. முதலீடுகளைச் செய்வதற்கு அல்லது நிதி சார்ந்த அபாயங்களை மேற்கொள்வதற்கு முன், உங்கள் நிதி ஆலோசகரை அணுகுவது நல்லது.
