சென்னையின் புதிய விமான நிலையங்கள் அமைக்க இரண்டு இடங்களை தமிழக அரசு தேர்வு செய்து மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. இந்த இடங்களில் சாத்தியக்கூறு தொடர்பான அறிக்கை தயாரிக்க கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் இரண்டு விதமான சிக்கல்கள் எழக்கூடும் என்று தகவல்கள் தெரிய வந்துள்ளது.
சென்னையில் உள்ள மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இட நெருக்கடி அதிகரித்து வருகிறது. இதனால் புதிய விமான நிலையம் கட்டமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக முந்தைய அரசுகளால் தேர்வு செய்த பரந்தூர் பலவிதமான எதிர்ப்புகளின் விளைவாக முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு ரத்து செய்துவிட்டது. எனவே புதிய இடத்தை தேடும் முயற்சியில் மாநில அரசு ஈடுபட்டுள்ளது.
தமிழக அரசு தேர்வு செய்த 2 இடங்கள்
இந்நிலையில் இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு தமிழக அரசு எழுதியுள்ள கடிதத்தில், செய்யூர் மற்றும் கும்மிடிப்பூண்டி ஆகிய இரண்டு இடங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. இங்கு தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டு கழகம் சார்பில் ஒரு குழு முதல்கட்ட ஆய்வு மேற்கொண்டது. இதன் தொடர்ச்சியாக மத்திய அரசு அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்திய விமான நிலைய ஆணையத்தின் இறுதி முடிவை அடுத்து, சம்பந்தப்பட்ட இடங்களில் சாத்தியக்கூறுகள் தொடர்பான அறிக்கை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பரந்தூர் விமான நிலைய விவகாரம்…முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்
செய்யூர், கும்மிடிப்பூண்டியில் சூழலியல், பாதுகாப்பு பிரச்சினை
ஆனால் இந்த இரண்டு இடங்களும் நிராகரிக்கப்பட அதிக வாய்ப்பிருப்பதாக அரசியல் விமர்சகர் சுமன் சி ராமன் தெரிவித்துள்ளார். இதையொட்டி இரண்டு காரணங்களையும் அடுக்கியிருக்கிறார். இதுதொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், விரிவாக குறிப்பிட்டுள்ளார். புதிய விமான நிலைய இடம்
பின்னணியில் இருக்கும் பிரச்சினைகள்
செய்யூர்
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் தான் செய்யூர் இருக்கிறது. இந்த வான்வெளி பரப்பானது தாம்பரம் ஏர் போர்ஸ் ஸ்டேஷன் கட்டுப்பாட்டில் அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி கல்பாக்கத்தில் இருந்து 30 கிலோமீட்டர் தூரத்தில் அந்த வான்வெளி பரப்பு இருக்கிறது. எனவே இதற்கு அனுமதி கிடைப்பது சாத்தியமில்லை. மேலும் சென்னையில் இருந்து கிட்டதட்ட 100 கிலோமீட்டர் தூரத்தில் செய்யூர் இருப்பது கவனிக்கத்தக்கது.
கும்மிடிப்பூண்டி
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 40 கிலோமீட்டர் தூரத்தில் கும்மிடிப்பூண்டி உள்ளது. மேலும் புலிகேட்டில் இருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. இதில் புலிகேட் என்பது பாதுகாக்கப்பட்ட சூழலியல் மண்டலமாக காணப்படுகிறது. எனவே பெரிய அளவில் நிலம் கிடைப்பது சாத்தியமில்லை.
மத்திய அரசு மீது திசை திருப்பும் தவெக அரசு
இத்தகைய காரணங்களை எடுத்துக் கொண்டால் தமிழக அரசு கணக்கு எடுபடுவது கடினம். இந்த இரண்டு இடங்களுமே மத்திய அரசு மூலம் நிராகரிக்கப்பட அதிக வாய்ப்பிருக்கிறது. பரந்தூர் விமான நிலைய திட்டம் அரசியல் காரணங்களுக்காக ஒருபுறம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மறுபுறம் சென்னையின் புதிய விமான நிலைய விவகாரத்தில் தமிழக அரசு சில முன்னெடுப்புகளை எடுக்கிறது என்பதை பொதுவெளியில் காட்டி கொள்ள இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக சுட்டிக் காட்டுகிறது. கடைசியில் மத்திய அரசு இரண்டு இடங்களையும் நிராகரித்து விட்டால் பழியை தூக்கி மத்திய பாஜக அரசின் மீது போட்டு விடுவர் என்று சுமன் சி ராமன் கூறியிருக்கிறார்.
Source link
