துலீப் டிராபி 2026 தொடரின் இறுதிப் போட்டியில், சௌத் ஜோன் அணிக்கு எதிராக ஈஸ்ட் ஜோன் அணிக் கேப்டன் இஷான் கிஷன், அபாரமாக செயல்பட்டு, 301 பந்துகளில் 27 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் உட்பட 250 ரன்களை குவித்து அசத்தினார். இப்படி, 250 ரன்களை அடித்தப் பிறகு, தசை பிடிப்பு பிரச்சினை காரணமாக, இஷான் கிஷன் ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார்.
பைனலில், 250 ரன்களை அடித்ததன் மூலம், இஷான் கிஷன் 4 வரலாற்று சாதனைகளை படைத்துள்ளார்.
1.முதல் விக்கெட் கீப்பர்: துலீப் டிராபி பைனலில், இரட்டை சதம் அடித்த முதல் விக்கெட் கீப்பராக இஷான் கிஷன் சாதனை படைத்துள்ளார். இதற்குமுன், 2010ஆம் ஆண்டில், சௌத் ஜோன் அணிக்காக விளையாடிய தினேஷ் கார்த்திக், 183 ரன்களை அடித்ததுதான் சாதனையாக இருந்தது.
2.ஈஸ்ட் ஜோன் அணிக்காக: துலீப் டிராபி பைனல் வரலாற்றில், ஈஸ்ட் ஜோன் அணிக்காக இரட்டை சதம் அடித்த முதல் வீரராக இஷான் கிஷன் சாதனை படைத்துள்ளார்.
3.7ஆவது வீரர்: துலீப் டிராபி தொடரின் பைனலில், 200+ ரன்களை அடித்த 7ஆவது பேட்டராக இஷான் கிஷன் இருக்கிறார். இதற்குமுன் ராமன் லம்பா, யாஷஸ்வி ஜெய்ஷ்வால், சேத்தேஸ்வர் புஜாரா, அனுஸ்மன் கெய்க்வாட், யூசப் பதான், மன்சூர் அலி கான் பட்டோடி ஆகியோர் பைனலில், 200+ ரன்களை அடித்திருக்கிறார்கள்.
4.ஒருநாள், துலீப் டிராபியில்: இந்திய கிரிக்கெட் வரலாற்றில், துலீப் டிராபி மற்றும் ஒருநாள் பார்மெட் இரண்டிலும் இரட்டை சதம் அடித்த பேட்டராக இஷான் கிஷன் சாதனை படைத்துள்ளார். 2022ஆம் ஆண்டில், வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் 210 ரன்களை இஷான் கிஷன் அடித்த நிலையில், தற்போது துலீப் டிராபி பைனலில் 250 ரன்களை எடுத்துள்ளார்.
ஸ்கோர் விபரம்: டாஸ் வென்று முதலில் களமிறங்கிய ஈஸ்ட் ஜோன் அணியில், முதல் மூன்று பேட்டர்களும் சிறப்பாக ஆடினார்கள். அபிமன்யு ஈஸ்வரன் 72 (86), வைபவ் சூர்யவன்ஷி 44 (37), ஷிகர் மோகன் 85 (120) ஆகியோர் சிறப்பாக ஆடினார்கள். அடுத்து, சுதிப் கராமி 6 (25) சொதப்பிய நிலையில், கேப்டன் இஷான் கிஷன் 250 (301), குமார் குஷக்ரா 101 (132) ஆகியோர் பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களை குவித்தார்கள்.
அடுத்து, அனுகுல் ராயும் 45 (98) ஓரளவுக்கு பெரிய ஸ்கோரை அடித்த நிலையில், தற்போது முகமது ஷமி, குரஷி ஆகியோர் களத்தில் இருக்கிறார்கள். ஈஸ்ட் ஜோன் அணி 6 விக்கெட்களை இழந்து, 640 ரன்களுக்கு மேல் அடித்து விளையாடி வருகிறது. இதன்மூலம், ஈஸ்ட் ஜோன் அணி வெற்றியைப் பெறுவது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது.
சௌத் ஜோன் அணியில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முகமது சிராஜ், 21 ஓவர்களில் 118 ரன்களை விட்டுக்கொடுத்து சொதப்பியுள்ளார். மெய்ண் பௌலர், சிராஜ் இப்படி படுமோசமாக சொதப்பியதால்தான், சௌத் ஜோன் அணியால் அடுத்தடுத்து விக்கெட்களை எடுக்க முடியவில்லை. பிட்ச், தற்போது பேட்டர்களுக்கு சாதகமாக இருக்கிறது. இருப்பினும், கடைசி மூன்று நாட்களில் ஸ்பின்னர்களால் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் எனக் கணிக்கப்பட்டுள்ளதால், ஈஸ்ட் ஜோன் அணி, இன்னிங்ஸ் வெற்றியையும் பெற அதிக வாய்ப்புள்ளது.
