நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இறுதிநாள் நிகழ்வுகள் தொடங்கியது. இதில் 8 துறைகளுக்கான மானியக்கோரிக்கை மீது இன்று விவாதம் நடைபெற உள்ளது.அப்போது பேசிய ஏ.வ.வேலு கூறுகையில்,நேற்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஆதாரங்கள் எதுவும் இன்றி, வெளியில் இருப்பவர்கள் குறித்துத் தனிப்பட்ட முறையில் பேசியுள்ளார். அமலாக்கத்துறை அறிக்கையை படித்தது மரவை மீறிய செயல் என்று கூறினார்.
மேலும் காவல்துறை சார்ந்த விவகாரங்கள், வழக்கு மன்றத்தில் நிலுவையில் உள்ள தகவல்கள், மிசா காலம் மற்றும் மாறன் போன்றவர்களின் பட்டியலை வாசித்து திட்டமிட்டுப் பேசப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் அவைக் குறிப்பில் இடம்பெற்றுள்ளன. அவை உடனடியாக அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் பேரவைத் தலைவரிடம் எதிர்க்கட்சி கொறடா ஏ.வ.வேலு கேட்டுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் பேசுகையில், சட்டப்பேரவையில் முதலமைச்சர் அவர்கள் அமலாக்கத்துறையின் (ED) பொது ஆவணங்கள் மற்றும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் ஆதாரங்களின் அடிப்படையிலேயே பேசினார் தவிர, வழக்கு விசாரணையையோ நீதிமன்றத்தையோ பற்றி பேசவில்லை. சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் உள்ள தகவல்களையே முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.
பயிர்களுக்குப் பூச்சிக்கொல்லி மருந்து தெளித்த விவகாரத்தில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களுக்காகத் திரு. வைத்திலிங்கம் மற்றும் எச்.பி. ராவ் மூலமாக ₹25,000 வீதம் இருமுறை பணம் பெறப்பட்ட விவரங்கள் சர்க்காரியா கமிஷனில் பதிவாகியுள்ளன.
க்ளோப் தியேட்டர் வழக்கு மற்றும் திரு. ஏ.எல். சீனிவாசன் அவர்களிடம் மதுபானக் கடை உரிமம் குறித்துப் பெறப்பட்ட விவரங்கள் ஏற்கனவே சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் உள்ளவைதான்.சர்க்காரியா கமிஷனில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் 6 புகார்களுக்குப் போதிய ஆதாரங்கள் இருந்ததன் அடிப்படையிலேயே சிபிஐ வழக்கு பதிவு செய்தது.
மிசா காலத்தில் திருட்டு, வழிப்பறி, கொலை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டவர்களும் கைது செய்யப்பட்டனர். அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் 20 அம்சத் திட்டத்தைக் கேலி செய்யும் வகையில் ’21-வது அம்சத் திட்டம்’ என அவதூறாகப் பேசியதால்தான் தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அன்று கைது செய்யப்பட்டாரே தவிர, மிசா சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டதாக எங்கும் எந்தக் குறிப்பும் இல்லை.
தேவையில்லாமல் பழைய விஷய உறுதிகளைக் கிளறி, எதிர்கட்சியினர் தங்களது அரசியல் தரத்தைத் தாங்களே தாழ்த்திக் கொள்கிறார்கள் என்றும், இந்த அவதூறானப் பேச்சுகளை அவர்கள் குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சர் அவர்கள் மிகக் கண்ணியமாக எடுத்துரைத்துள்ளதாக கூறினார்.
