கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. முதல்முறை பேரவை நிகழ்வுகள் முழுவதுமாக நேரலை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒவ்வொரு உறுப்பினர்களின் செயல்பாடுகளையும் உன்னிப்பாக கவனிக்க முடிந்தது. பலர் ஆக்கப்பூர்வமாக தனது தொகுதி சார்ந்தும், மாநில நலன் சார்ந்தும் முக்கிய விஷயங்களை எடுத்து வைத்தனர். இதற்கிடையில் தவெக – திமுக இடையில் காரசாரமான அரசியல் மோதல்களுக்கும் பஞ்சமில்லை. நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மிகவும் ஆக்கப்பூர்வமாக செயல்பட்ட உறுப்பினர்களில் ஒருவராக திகழும் பாமக எம்.எல்.ஏ சவுமியா அன்புமணி, இன்றைய தினமும் மக்கள் நலன் சார்ந்தும், சுற்றுச்சூழல் சார்ந்தும் பல விஷயங்களை முன்வைத்தார்.
இந்த சூழலில் பாமக நிறுவனர் ராமதாஸ் தன்னை தொலைபேசியில் அழைத்து ஈழத்தமிழர்கள் கண்ணியமான வாழ்க்கையை வாழ்வதற்கு உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும். இந்த கோரிக்கையை சட்டப்பேரவையில் முன்வைக்குமாறு கேட்டுக் கொண்டதாக சவுமியா அன்புமணி பேசினார். இவர்களுக்கு புதிய வீடுகள் கட்டும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. அதை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றார்.
ஊழல் கண்காணிப்பாளர்களை விரைவாக நியமிக்க வேண்டும். அப்போது தான் விசாரணைகள் வேகமாக நடைபெறும். சேவை உரிமை பெறும் சட்டம் எவ்வளவு விரைவாக செயல்படுத்த முடியுமோ, அவ்வளவு விரைவாக கொண்டு வர வேண்டும். அப்படி செய்தால் தான் ஊழல் ஒழிப்பிற்கு அர்த்தம் இருக்கும்.
ஊழல் ஒழிப்பின் தாக்கத்தை மக்கள் உணர வேண்டும். உதாரணமாக மின்சாரத் துறையில் ஊழல் ஒழிக்கப்பட்டால் மின் கட்டணம் குறைய வேண்டும். கல்வித்துறையில் ஊழல் ஒழிந்தால் கல்விக் கட்டணம் குறைய வேண்டும். இதை கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும்.
சட்டப்பேரவை நடவடிக்கைகளை முழுவதுமாக நேரலை செய்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள் அனைவரும் ஆண்டிற்கு ஒருமுறை தங்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்வர். பொது வாழ்வில் நேர்மையை கொண்டு வரும். இதனை சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் கொண்டு வரலாம்.
சட்டப்பேரவை உறுப்பினர்களின் நிதியை 5 கோடி ரூபாயாக உயர்த்த வேண்டும் என்பது அனைவரது கோரிக்கை. அதை கருத்தில் எடுத்து கொள்ள வேண்டும்.
தர்மபுரி மாவட்டத்தின் குடிநீரில் புளோரசிஸ் அதிகமாக உள்ளது.
