சென்னை: திடக்கழிவு மேலாண்மைக்கான புதிய விதிகள், நேற்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், வீடுகளில் சேரும் குப்பைகளை, இனி நான்கு வகையாக பிரிக்க வேண்டியது கட்டாயமாகிறது.
நாடு முழுதும் திடக்கழிவுகளை கையாள்வது, உள்ளாட்சி அமைப்புகளுக்கு சவாலாக உள்ளது. இதில் நடக்கும் தவறுகளால், சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது.
இ தை கருத்தில் வைத்து, 2016ல் திடக்கழிவு மேலாண்மைக்கான விதிகளை, மத்திய அரசு அறிவித்தது. இதை அந்தந்த மாநில அரசுகள் மேற்பார்வையில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் அமல்படுத்த உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், இந்த விதிகளில் காலத்துக்கு ஏற்ப மாற்றங்கள் தேவைப்படுகின்றன. இதற்காக, தற்போதைய சூழலுக்கு ஏற்ப, புதிய விதிகள் உருவாக்கப்பட்டன. ‘திடக்கழிவு மேலாண்மை விதிகள் – 2026’ என்ற பெயரிலான இந்த புதிய விதிகளுக்கு, மத்திய அரசு சில மாதங்களுக்கு முன் ஒப்புதல் அளித்தது.
இதையடுத்து, ஏப்., 1 முதல் இந்த விதிகள் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது.
இது குறித்து, மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நாடு முழுதும், ‘திடக்கழிவு மேலாண்மை விதிகள் – 2026’ நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன. வீடுகளில் இருந்து குப்பையை தரம் பிரித்து வழங்குவதில் துவங்கி, பல்வேறு நிலைகளில் புதிய கட்டுப்பாடுகள் வந்துள்ளன.
தற்போது, வீடுகளில் மட்கும் குப்பை, மட்காத குப்பை என்ற, இரண்டு வகையில் மட்டுமே பிரிக்கப்படுகிறது. இனி ஈரமான திடக்கழிவு, உலர்ந்த திடக்கழிவு, சுகாதார திடக்கழிவு, சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய திடக்கழிவு என, நான்கு வகையாக தரம் பிரிக்க வேண்டியது கட்டாயமாகிறது.
இதில், ஒவ்வொரு பிரிவுக்கும் உட்பட்ட திடக்கழிவுகள் எவை என்பதை பட்டியலிட்டு, மக்களிடம் உள்ளாட்சி அமைப்புகள் பிரசாரம் செய்ய வேண்டும். அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் போன்ற இடங்களில், அதிக திடக்கழிவு உருவாக்குவோருக்கான பொறுப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இந்த புதிய விதிகளை கடைப்பிடிப்பது குறித்து, பகுதி வாரியாக விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்த, உள்ளாட்சி அமைப்புகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளன. உலர் நிலை திடக்கழிவுகளை பயன்படுத்தி, உரம், மின்சாரம் தயாரிக்கும் பணிகளுக்கு, அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்.
திடக்கழிவுகள் சேகரிக்கப்பட்டதில் இருந்து, அது மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படுவதை, ‘ஆன்லைன்’ முறையில் கண்காணிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் தேர்தல் பணிகள் முடிந்த பின், இதற்கான நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
