சென்னையில் கடுமையான போக்குவரத்து மற்றும் இடநெருக்கடி நிலவும் பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டக் கூடாது என்றும், சென்னைக்கு வெளியே தனி நிர்வாக நகரம் அமைக்கப்பட வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவித்தபடி, ₹1,200 கோடி செலவில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட உள்ளது. இதற்காக அதிகாரிகள் பட்டினப்பாக்கம் பகுதியைத் தேர்வு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சாந்தோம் மற்றும் பசுமைவழிச் சாலைகளில் ஏற்கனவே கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. மேலும், புகழ்பெற்ற தேவாலயம், பள்ளிகள் மற்றும் பத்திரப்பதிவுத் துறை அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் புதிய தலைமைச் செயலகம் வந்தால் நெரிசலைச் சமாளிப்பது கடினமாகும்.
15 மாடி கட்டிடமாக அமைக்கத் திட்டமிடப்பட்டாலும், FSI விதிகளின்படி தேவையான காலி இடம், பசுமைப் பரப்பு, வாகன நிறுத்துமிடம் மற்றும் மருத்துவமனை போன்ற கட்டமைப்பு வசதிகளை உருவாக்க 26 ஏக்கர் நிலம் போதுமானதாக இருக்காது.
அவசரப்பட்டு நெருக்கடியான இடத்தில் கட்டப்பட்டுப் பின்னர் கைவிடப்படும் சூழல் வரக்கூடாது என்பதால், தமிழக அரசு அவசரப்படாமல் சென்னைக்கு வெளியே பரந்த இடத்தில் தனி நிர்வாக நகரத்தை உருவாக்க வேண்டும் என அன்புமணி கேட்டுக்கொண்டுள்ளார்.
