பாமக தேர்தல் அறிக்கையை வெளியிட்டு அன்புமணி உறுதி

திமுக ஆட்சியில் நடைபெற்றிருப்பதாகச் சொல்லப்படும் ரூ.6 லட்சம் கோடி ஊழல் குறித்து தனித் தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்படும் என பாமக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை தேர்தலுக்கான பாமக-வின் தேர்தல் அறிக்கையை சென்னை தியாகராய நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அன்புமணி நேற்று வெளியிட்டார். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திமுக ஆட்சியில் மணல் கொள்ளை, கனிமவளக் கொள்ளை, பணியாளர் நியமன ஊழல், ஒப்பந்த ஊழல், பணியிட மாற்ற ஊழல், மது வணிகத்தில் வரி ஏய்ப்பு என ரூ.6 லட்சம் கோடி அளவுக்கு ஊழல்கள் நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அவை குறித்து தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரிக்கப்படும். அமைச்சர்கள், அதிகாரிகள் மீதான வழக்குகளை விசாரிப்பதற்காக சென்னையில் 3 சிறப்பு நீதிமன்றங்களும், மதுரை மற்றும் கோவையில் தலா ஒரு சிறப்பு நீதிமன்றமும் அமைக்கப்படும். 5 லட்சம் பேருக்கு அரசு வேலை, தனியார் துறை, சுயவேலைவாய்ப்புகள் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு கோடி பேருக்கு வேலை வழங்கப்படும். முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும். கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் நடமாட்டத்தை ஒழிக்க கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

Source link