புதுடில்லி: தலைப்புச்செய்திகளில் இடம் பிடிப்பதற்காகவே, ராகுல் எப்போதும் அற்பமான செயல்களில் ஈடுபடுகிறார் என

புதுடில்லி: தலைப்புச்செய்திகளில் இடம் பிடிப்பதற்காகவே, ராகுல் எப்போதும் அற்பமான செயல்களில் ஈடுபடுகிறார் என பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ குற்றம் சாட்டி உள்ளார்.

இது குறித்து நிருபர்களிடம், கிரண் ரிஜிஜூ கூறியதாவது: பிரதமர் மோடியின் கீழ் நாடு நிறைய முன்னேற்றம் அடைந்துள்ளது. 60 ஆண்டுகால ஆட்சியில் நாட்டை பலவீனப்படுத்திய காங்கிரஸ் மீது மக்கள் மீண்டும் ஒருபோதும் நம்பிக்கை வைக்க மாட்டார்கள். தலைப்புச் செய்திகளில் இடம் பிடிப்பதற்காகவே, ராகுல் எப்போதும் அற்பமான செயல்களில் ஈடுபடுகிறார். இருப்பினும், இவை அனைத்தும் எந்த விளைவையும் ஏற்படுத்தாது.

பார்லிமென்டில் பிரதமரின் உரைக்கு முன்னதாக 40, 50 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சபாநாயகரின் அறைக்குள் நுழைந்தனர். அவர்கள் மோசமான முறையில் நடந்து கொண்டனர். நான் அங்கு இருந்தேன். அவர்கள் பிரச்னையை உருவாக்க கூச்சலிடுகிறார்கள் என்பதை நாங்கள் உணர்ந்தோம். எனவே பிரதமர் அவைக்கு வராமல் இருப்பது நல்லது என்ற முடிவு எடுக்கப்பட்டது.

நாங்கள் அதிகாரத்தில் இருக்கிறோம், போதுமான எண்ணிக்கையிலான பலத்தையும் கொண்டுள்ளோம். அதிகாரத்தை பயன்படுத்தி, நாங்கள் சமாளித்திருக்கலாம். ஆனால் நாங்கள் அதைச் செய்ய விரும்பவில்லை. எனவே, பிரச்சினையைச் சமாளிக்க ஒரு வழியைக் கண்டுபிடித்தோம். பிரதமர் உரை இல்லாமல் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றினோம். இவ்வாறு கிரண் ரிஜிஜூ கூறினார்.

Source link