சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் சுமார் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகத்தைக் கட்டத் தமிழக அரசு 26.36 ஏக்கர் நிலத்தை அடையாளம் கண்டுள்ளது. இதற்கான அரசாணையும் இன்று வெளியாகி விட்டது.சாந்தோம் பகுதிக்குத் தெற்கே ,மெரினா கடற்கரைச் சாலையின் இடையில் அமைந்துள்ள பட்டினப்பாக்கம் பகுதியில் சுமார் 26.36 ஏக்கர் நிலப்பரப்பில் இப்புதிய ஒருங்கிணைந்த தலைமைச் செயலக வளாகம் அமையவுள்ளது. சுமார் 20 லட்சம் சதுர அடி கட்டடப் பரப்பளவில் அமையவுள்ள இக்கட்டிடம், 15 மாடிகளைக் கொண்ட அதிநவீன ஒருங்கிணைந்த வளாகமாக வடிவமைக்கப்பட உள்ளது.
சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் சுமார் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகத்தைக் கட்டத் தமிழக அரசு 26.36 ஏக்கர் நிலத்தை அடையாளம் கண்டுள்ளது. இதற்கான அரசாணையும் இன்று வெளியாகி விட்டது.சாந்தோம் பகுதிக்குத் தெற்கே ,மெரினா கடற்கரைச் சாலையின் இடையில் அமைந்துள்ள பட்டினப்பாக்கம் பகுதியில் சுமார் 26.36 ஏக்கர் நிலப்பரப்பில் இப்புதிய ஒருங்கிணைந்த தலைமைச் செயலக வளாகம் அமையவுள்ளது. சுமார் 20 லட்சம் சதுர அடி கட்டடப் பரப்பளவில் அமையவுள்ள இக்கட்டிடம், 15 மாடிகளைக் கொண்ட அதிநவீன ஒருங்கிணைந்த வளாகமாக வடிவமைக்கப்பட உள்ளது.
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம்
பட்டினப்பாக்கத்தின் ஃபோர்ஷோர் எஸ்டேட் குடியிருப்புகள் மற்றும் விளையாட்டு மைதானப் பகுதிகள் உள்ளிட்ட 25.16 ஏக்கர் நிலமும், வருவாய்த்துறை ஆவணங்கள் மூலம் கண்டறியப்பட்ட 1.2 ஏக்கர் நிலமும் சேர்க்கப்பட்டு மொத்தம் 26.36 ஏக்கர் நிலப்பரப்பு இத்திட்டத்திற்காக முழுமையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.புதிய தலைமைச் செயலகம் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் வீடு மற்றும் அலுவலகத்திற்கு 350 மீட்டர் தொலைவிலேயே அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. தலைமைச் செயலக வளாகத்தில் புதிய சட்டசபையும் இடம் பெறவுள்ளது.
கடந்த திமுக ஆட்சியில் மெரினா வணிக மையம் கொண்டுவரப்பட்ட இடம்
அதேசமயம், புதிய தலைமைச் செயலகம் வந்த பிறகு, இப்பகுதியில் மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. இதனைக் கையாளும் வகையில், சென்னை லைட்ஹவுஸ் முதல் அடையாறு திரு.வி.க. பாலம் வரை 3.5 கி.மீ தூரத்திற்குப் புதிய உயர்மட்ட மேம்பாலம் அமைக்க நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்துள்ளது. கடந்த திமுக ஆட்சியில் இந்த இடம் ‘மெரினா வணிக மையம் என்று அறிவித்து இருந்த நிலையில், அங்கிருந்த குடியிருப்புவாசிகளை வெளியேற்றுவது தொடர்பாகத் தொடரப்பட்ட பல்வேறு வழக்குகள் காரணமாக அத்திட்டம் நிலுவையில் இருந்தது.
விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்க ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீடு
சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் அந்த வழக்குகளை முடித்து வைத்து, வீட்டுவசதி வாரியக் குடியிருப்புவாசிகளுக்கு மாற்று இடம் வழங்கி உத்தரவிட்டதைத் தொடர்ந்து, தற்போது நிலப் பிரச்சனைகள் முடிவுக்கு வந்துள்ளன. இதனையடுத்து, இந்த இடத்தில் சிறப்புமிக்க புதிய தலைமைச் செயலகம் கட்டும் பணிகளை மேற்கொள்ளவுள்ளது தமிழ்நாடு அரசு.இதற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்க ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படவுள்ளது. இதற்கிடையே, தற்போது இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதன் பின்னணி குறித்து பார்க்கலாம்.
முதல்வர் விஜய்யின் தீவிரத்திற்கு ஜோதிட ரீதியான காரணம்
இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றால் முதலில் உச்சநீதிமன்றத்திற்கு எடுத்து செல்ல வேண்டும். அங்கு முறையான ஆவணங்கள் சமர்பிக்கப்பட்ட பிறகு திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த பிறகே இதனை செயல்படுத்த முடியும். மறுபக்கம், இந்த திட்டத்தை செயல்படுத்தி முடிக்க சுமார் 5 அல்லது 6ஆண்டுகள் ஆகும். 5 வருடங்களுக்குள் கட்டி முடிக்க தவெக அரசு முயலும். அப்படி கட்டி முடிக்கப்பட்டால், விஜய் பெயர் தமிழக அரசியல் வரலாற்றில் நிலைத்திருக்கும். முதல்வர் விஜய் இந்த திட்டத்திற்கு தீவிரம் காட்டுவதற்கு ஜோதிட ரீதியாகவும் காரணம் சொல்லப்படுகிறது. பட்டினப்பாக்கம் பகுதியில் அமைய உள்ள புதிய தலைமை செயலக கட்டிடம் வங்கக் கடலை ஒட்டி அமைந்திருப்பதால் கிழக்கு நோக்கி நீர்நிலைகள் இருப்பது நாட்டின் தலைவனுக்கும் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கும் பெரும் புகழையும் நிலைத்தன்மையையும் தரும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
ஜெயலலிதாவின் அதிரடி நடவடிக்கை
மேலும் தவெக அரசு மக்கள்நலத்திட்டங்களை செயல்படுத்த போதிய நிதி இல்லாததால் தவித்து வருகிறது. இதற்காக அடுத்தடுத்து கடன் வாங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் உண்மையான கடன் அளவு ரூ.13.18 லட்சம் கோடியாக உள்ளது. இதனால் இன்னும் கூடுதல் சுமை ஆகும். அடுத்து வரும் ஆண்டுகளில் மேலும் மேலும் கடன் வாங்கப்படும். இதனால் புதிய தலைமைச் செயலக கட்டுமானத்திற்கான நிதி ஒதுக்கீட்டிலும் சிக்கல் வரும். இந்த திட்டத்திற்கு பின்னால் சில அரசியல் காரணமும் உள்ளது. 2008 திமுக ஆட்சி காலத்தில் கருணாநிதி முதல்வராக இருந்த போது புதிய தலைமைச் செயலகக் கட்டுமானப் பணிகள் தொடங்கின. ஓமந்தூரார் அரசினர் வளாகத்தில் தொடங்கின. இரண்டே ஆண்டுகளில் அதாவது 2010-ல் ரூ. 1000 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகக் கட்டிடம் திறக்கப்பட்டது. ஆனால் 2011-ல் ஆட்சி மாறி விட்டது. அதிமுக ஆட்சிக்கு வந்ததும், ஜெயலலிதா புதிய தலைமைச் செயலகத்தை தொடர்ந்து பயன்படுத்தாமல், மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்த பழைய தலைமைச் செயலகத்துக்கே அரசு நிர்வாகத்தை மாற்றினார். ஓமந்தூரார் வளாகத்தில் கட்டப்பட்ட கட்டிடத்தை மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்வி நிறுவனமாக மாற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எடுக்கப்பட்ட முடிவு என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
புதிய தலைமை செயலகம் திட்டமிட்டபடி வருமா?
இப்போது தவெக அரசும் கிட்டத்தட்ட அதே பாணியில்தான் செயல்படுவதாக ஏற்கனவே குற்றச்சாட்டு உள்ளது. குறிப்பாக கடந்த திமுக ஆட்சியில் முதல்வராக மு.க.ஸ்டாலின் இருந்த போது கொண்டு வந்த திட்டங்களுக்கு பெயர் மாற்றம் செய்துள்ளது. ஒருவேளை விஜய் ஆட்சி 5 ஆண்டுகளை கடந்து தொடர்ந்தால் பாதிப்பு இல்லை. அப்படி இல்லாமல் ஆட்சி மாற்றம் நடந்தால் புதிய அரசு வந்தால் புதிய தலைமைச் செயலகம் மாற்றப்படும் அபாயம் உள்ளது.இருப்பினும் பெரும் பொருட் செலவில் கட்டப்படும் இந்த புதிய தலைமை செயலகத்தை மாற்றாத வகையில் சட்டப் பாதுகாப்பை தவெக அரசு எடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு எதிர்ப்புகள், அதிருப்திகளுக்கு மத்தியில், புதிய தலைமை செயலகம் திட்டமிட்டபடி வருமா? தமிழ்நாட்டின் வரலாற்றில் விஜய்யின் பெயரும் இடம் பிடிக்குமா என்பதை போகப் போகப் பார்க்கலாம்.
