வைகோ தலைமையிலான ம.தி.மு.க-வில் 30 ஆண்டுகாலம் பயணித்து, தற்போது அ.தி.மு.க-வின் மாநில அம்மா பேரவை துணைச் செயலாளராக இருப்பவர் இ. மார்கோனி. இவர் சீர்காழியில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, துரை வைகோ மீது மிகக்கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார்.
அவர் அளித்தப் பேட்டியில், “வாரிசு அரசியலை எதிர்த்துத் தொடங்கப்பட்ட இயக்கம் இன்று வாரிசிடமே அடமானம் வைக்கப்பட்டுள்ளது. 30 ஆண்டுகாலம் ரத்தம் சிந்தி உழைத்த எங்களைப் போன்ற தொண்டர்களை துரை வைகோ கேவலமாக நடத்துகிறார்.
பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்திருந்தால் நாங்கள் எப்போதோ ஆளுங்கட்சியில் சேர்ந்திருப்போம். ஆனால், கொள்கைக்காக நின்ற எங்களை துரை வைகோ மதிப்பதில்லை.
திருச்சியில் போட்டியிட்ட போது “செத்தாலும் தனிச் சின்னத்தில்தான் நிற்பேன்’ என்று கூறி தீப்பெட்டிச் சின்னத்தில் வென்ற துரை வைகோ, இன்று சீர்காழி உள்ளிட்ட இடங்களில் தோல்வி பயத்தின் காரணமாக தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளார். உதயசூரியன் சின்னத்திலேயே நிற்க வேண்டிய கட்டாயத்திற்கு ம.தி.மு.க தள்ளப்பட்டுள்ளது. இது அந்த இயக்கத்தின் அடையாளத்தை அழிக்கும் செயல். ஒரு பிரதமரையே எதிர்த்து கேள்வி கேட்ட வைகோவின் கம்பீரம் இன்று தி.மு.க-விடம் அடமானம் வைக்கப்பட்டுவிட்டது.
