சீட் பெல்ட் அணிவது கட்டாயம்.. ஏற்கெனவே சட்டம் இருக்கு! விதிகளை அமல்படுத்துவது யார் பொறுப்பு? உச்சநீதிமன்றம் அதிரடி..

வாகனத்தில் பயணிக்கும்போது சீட் பெல்ட் அணிவதை உறுதி செய்ய ஏற்கெனவே போதுமான சட்ட விதிகள் உள்ளன. அவற்றை முறையாக அமல்படுத்த வேண்டியது காவல்துறை உள்ளிட்ட அமலாக்க அமைப்புகளின் பொறுப்பு என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சீட் பெல்ட் அணிவதை கட்டாயமாக்குவதற்கான கூடுதல் உத்தரவுகளை பிறப்பிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு, தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் காயங்களை சீட் பெல்ட் பயன்பாட்டின் மூலம் கணிசமாகக் குறைக்க முடியும் என வாதிட்டார். சட்டம் இருந்தபோதிலும், சில வாகனங்களில் அலங்கார சீட் கவர்கள் மற்றும் பல்வேறு மாற்றங்கள் காரணமாக சீட் பெல்ட்கள் சரியாக செயல்படாத நிலை இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கு நீதிபதிகள், சீட் பெல்ட் அணிவது தொடர்பான சட்ட விதிகள் தெளிவாக உள்ளதாக குறிப்பிட்டனர். பிரச்சினை புதிய சட்டம் கொண்டுவருவது அல்ல; ஏற்கெனவே உள்ள விதிகளை மக்கள் முறையாகப் பின்பற்றுவதை உறுதி செய்வதே முக்கியம் என நீதிமன்றம் கூறியது.

1989ஆம் ஆண்டின் மத்திய மோட்டார் வாகன விதிகளில் உள்ள விதி 138(3)-ஐ நீதிமன்றம் குறிப்பிட்டது. அதன்படி, வாகனம் இயக்கத்தில் இருக்கும் போது ஓட்டுநர், முன் இருக்கையில் அமர்ந்திருப்பவர் மற்றும் முன்னோக்கி அமைந்த பின்புற இருக்கைகளில் பயணிப்பவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும்.

சீட் பெல்ட் அணியாமல் இருப்பது மற்றும் விதிகளை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஆகியவை சாலை விபத்துகளில் உயிரிழப்பு மற்றும் காயங்கள் ஏற்படுவதற்கான முக்கிய காரணிகளாக இருப்பதாக மனுதாரர் தரப்பு வாதிட்டது.

மேலும், மனுதாரர் தனது பரிந்துரைகளை சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் சமர்ப்பிக்கலாம் என நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து, மனுவை முடித்து வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

Also Read: அதிமுகவை அதிரவைத்த விஜய்.. ராஜினாமா செய்த முன்னாள் அதிமுக வேட்பாளர்களுக்கே மீண்டும் சீட்! இடைத்தேர்தலில் பரபரப்பு…

Source link