தமிழக வெற்றி கழகத்தின் சட்டமன்ற உறுப்பினரான வி.எஸ். பாபுவுக்கு நேற்றைய தினம் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்களுடைய தொடர் கண்காணிப்பிலும் அவர் இருந்து வருகிறார். இப்படியான நிலையில் தவெகவின் அமைச்சரான மரிய வில்சன், எம்எல்ஏ வி.எஸ். பாபுவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் வி.எஸ். பாபுவின் உடல்நலம் குறித்து தெரிவித்தார். இது தொடர்பாக மரிய வில்சன் பேசியுள்ளதாவது, நல்ல ஹெல்தியா இருக்கார். கொஞ்சம் ரெகவர் ஆகிட்டு இருக்கார். அவர் stable-ஆக இருப்பதாக டாக்டர் சொல்லிட்டாங்க. ஒன்னும் பிரச்சனை இல்லை. கொஞ்சம் சளிதான் இருந்தது. அது குறைஞ்சுட்டு இருக்கு என்றார் மரிய வில்சன்.
அதனை தொடர்ந்து வி.எஸ். பாபுவிடம் நீங்க பேசுனீங்களா என்று கேட்கப்பட்டதற்கு, அவர் நல்ல பேசினார். எல்லாரையும் நல்லா விசாரிச்சார். அதோடு முதல்வர் விஜய்யும் விசாரிச்சு இருக்கார். பொதுச்செயலார் புஸ்ஸி ஆனந்தும் விசாரித்துள்ளார் என்று தெரிவித்துள்ளார் மரிய வில்சன். தொடர்ந்து அவரிடம் சிஎம் சார் நேரில் வந்து பார்ப்பதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்று பத்திரிகையாளர் கேட்டதற்கு முதல்வர் விஜய் போனில் விசாரித்துள்ளதாக கூறினார்.
முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் வி.எஸ். பாபு. இதனையடுத்து அவருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படலாம் என அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் வெளியானது. ஆனாலும் அவருக்கு அதுபோன்று முக்கிய பதவி எதுவும் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக அவர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது.
ஆனாலும் தமிழக வெற்றி கழகத்தின் சட்டமன்ற உறுப்பினராகவ வி.எஸ். பாபு தொடர்கிறார். கடந்த சில வாரங்களாக நடந்து வந்த பட்ஜெட் கூட்டத்தொடரிலும் அவர் பங்கேற்று வந்தார். நேற்று முன்தினம் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வந்த நிலையில், வி.எஸ். பாபுவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. கடுமையான மூச்சு திணறல் ஏற்பட்ட நிலையில் சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
