திருச்சியில் அமையவுள்ள பன்முகப் போக்குவரத்து சரக்கு மையம் மற்றும் உலர் துறைமுகத் திட்டத்தை விரைவுபடுத்தக் கோரி, திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ நேற்று (செப்டம்பர் 9, 2026) மாலை 6 மணியளவில் தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களைச் சந்தித்து விரிவான கோரிக்கை கடிதம் ஒன்றை வழங்கியுள்ளார்.
கூட்டணி கட்சித் தலைவர்களின் ஆலோசனைச் கூட்டம் முடிந்த கையோடு இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இச்சந்திப்பின் போது, திருச்சியில் பன்முகப் போக்குவரத்து சரக்கு மையம் ( Multi Modal Logistics Hub ) அமைக்கப்படும் என சட்டமன்ற விதி 110-இன் கீழ் அண்மையில் அறிவிப்பு வெளியிட்டதற்காக முதலமைச்சருக்குத் தனது மனமார்ந்த நன்றியை துரை வைகோ தெரிவித்துக் கொண்டார். இத்திட்டத்தை TIDCO (தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம்) முன்னெடுத்துச் செய்வது, இப்பகுதியின் நீண்டகாலப் போராட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய மைல்கல் என்றும் அவர் புகழாரம் சூட்டினார்.
மத்திய மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சி
இச்சந்திப்பு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ விடுத்துள்ள அறிக்கையில், “இந்த உலர் துறைமுகத் திட்டம் திருச்சி மட்டுமின்றி கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மத்திய தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மாவட்டங்களின் தொழில் மற்றும் ஏற்றுமதி வளர்ச்சிக்கு அச்சாணியாக விளங்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இத்திட்டத்தின் மூலம்:
சரக்குப் போக்குவரத்துச் செலவுகள் கணிசமாகக் குறையும். சர்வதேசச் சந்தையில் உள்நாட்டு ஏற்றுமதியாளர்களின் போட்டித்திறன் அதிகரிக்கும். மத்திய தமிழகப் பகுதிகளில் புதிய தொழில் முதலீடுகளும், ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளும் உருவாகும்.
துரை வைகோ பதிவு
அவரின் பதிவு பின்வருமாறு,
நேற்று (09.09.2026) மாலை 6 மணியளவில், கூட்டணி கட்சி தலைவர்களின் சந்திப்பை முடித்துக்கொண்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அன்புச் சகோதரர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை சந்தித்தேன்.
அப்போது, திருச்சியில் உலர் துறைமுகம் / பன்முகப் போக்குவரத்து சரக்கு மையம் (Multi Modal Logistics Hub) அமைக்கும் திட்டம் தொடர்பான எனது விளக்கமான கோரிக்கை கடிதத்தை அளித்தேன்.
அதில், முக்கியமாக, இத்திட்டத்திற்கு முதல்வர் அவர்கள் தமது ஆதரவை தெரிவித்து, சட்டமன்றத்தில், திருச்சியில் பன்முகப் போக்குவரத்து சரக்கு மையம் அமைக்கும் பணியை TIDCO முன்னெடுக்கும் என விதி 110-இன் கீழ் அறிவித்ததை மனதார வரவேற்றேன். இது நீண்டகால முயற்சிகளில் ஒரு முக்கியமான மைல்கல் என்று நன்றி பாராட்டினேன்.
திருச்சி உள்ளிட்ட கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் போன்ற மத்திய தமிழ்நாட்டு மாவட்டங்களின் தொழில், ஏற்றுமதி மற்றும் வேலைவாய்ப்பு வளர்ச்சிக்கு இத்திட்டம் மிகவும் அவசியமாகும். சரக்குப் போக்குவரத்துச் செலவு குறையும், ஏற்றுமதியாளர்களின் போட்டித்திறன் அதிகரிக்கும், புதிய முதலீடுகளும் வேலைவாய்ப்புகளும் உருவாகும் என்பதை சுட்டிக்காட்டி, இத்திட்டத்தை விரைவாக செயல்படுத்த தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டேன்.
மேலும், ஒன்றிய அரசுடன் தொடர்புகொள்ள ஏதுவாக இந்த திட்டத்திற்கான திட்ட முன்மொழிவு தயாரிப்பு மற்றும் ஒருங்கிணைப்புப் பணிகளில் என்னையும் இணைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டேன்.
அனைத்தையும் கேட்டுக்கொண்ட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இதற்கான தனது பணியை ஆர்வத்தோடு முன்னெடுத்துவருவதாகவும், வளர்ச்சிப் பணிக்கே தனது ஆட்சியில் முன்னுரிமை தருவதாகவும் தெரிவித்தார். மிகுந்த மகிழ்வோடு நன்றி தெரிவித்துக்கொண்டேன் என பதிவிட்டு உள்ளார்.
