திருவனந்தபுரம்: பிரதமர் மோடியின் வாக்குறுதியின் அடிப்படையில் கேரள மாநிலத்திற்கு மாற்றத்தைக் கொண்டு வர இதுவே சரியான தருணம் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
கேரளாவின் திருவனந்தபுரத்தில் முன்னாள் ராணுவ வீரர்களைக் கௌரவிக்கும் ‘சைனிக் சம்மான் சம்மேளன்’ நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்.
அப்போது, அவர் பேசியதாவது; போர் நெருக்கடிக்கு மத்தியில், ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் இந்திய சரக்கு கப்பல்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய இந்தியக் கடற்படை தீவிரமாக பாதுகாப்பை வழங்கி வருகிறது. வளைகுடா பிராந்தியத்தில் இந்தியாவின் நலன்களைப் பாதுகாப்பதற்காக பிரதமர் மோடி, தூதரக ரீதியிலான வழிகளைப் பயன்படுத்தி வருகிறார்.
மேற்கு ஆசியாவின் நிலவரங்களை நாங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். மேற்கு ஆசியாவில் நிலவி வரும் பதற்றங்களால் ஏற்படக்கூடிய எரிசக்தி விநியோகத் தடைகளை எதிர்கொள்ள இந்தியா முழுத் தயாராக இருக்கிறது. நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏதுமில்லை.
கேரள சட்டசபை தேர்தலில் பாஜ வேட்பாளர்களுக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும். மோடியின் உத்தரவாதங்களின் கீழ் மாநிலத்திற்கு மாற்றத்தைக் கொண்டு வர இதுவே சரியான தருணம். பிரதமரின் தலைமை 24 கேரட் தங்கம் போன்றது. அது சோதிக்கப்பட்டு நிரூபிக்கப்பட்டது, என்று கூறினார்.
