சென்னை: சாத்தான் குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் ஏப்ரல் 6ம் தேதி தண்டனை விபரங்கள் குறித்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கொரோனா ஊரடங்கு காலத்தில், துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் வியாபாரிகள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கியதில் உயிரிழந்தனர். இந்த வழக்கில், குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உட்பட, 9 போலீசாருக்கு இன்று (ஏப்., 2) தண்டனை விபரங்கள் அறிவிக்கப்படும் என மதுரை மாவட்ட நீதிமன்றம் அறிவித்து இருந்தது.
இந்த வழக்கில் இன்று நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உட்பட, 9 போலீசாரும் ஆஜர்படுத்தப்பட்டனர். சி.பி.ஐ. தரப்பில் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. குற்றவாளிகள் தரப்பில் தூக்கு தண்டனை விதிக்க வேண்டிய அவசியம் இல்லை. திட்டமிட்டு சம்பவம் நடக்கவில்லை. குறைந்தபட்ச தண்டனை விதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
பிறகு, ஏப்ரல் 6ம் தேதி தண்டனை விபரங்கள் குறித்து உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக் கூறி நீதிபதி உத்தரவிட்டார். ஏற்கனவே ஒருமுறை தண்டனை விதிப்பதை நீதிமன்றம் ஒத்திவைத்தது. தற்போது இன்று 2வது முறையாக ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
