குஜராத்தில் 22 வயது இளம்பெண் உயிரிழந்த வழக்கு, காவல்துறையின் விசாரணையில் கொலை வழக்காக மாறியுள்ளது. சாலை விபத்தில் உயிரிழந்ததாக ஆரம்பத்தில் கருதப்பட்ட நிலையில், சம்பவத்தின் பின்னணி குறித்து நடத்தப்பட்ட விசாரணை குடும்பத்தினரையே குற்றவாளிகளாகக் கொண்டு சென்றுள்ளது.
சர்கேஜ் பகுதியைச் சேர்ந்த சோபியா பரூக், தனியார் மருத்துவமனையில் வரவேற்பாளராக பணியாற்றி வந்தார். சில மாதங்களுக்கு முன்பு ஆண் நண்பருடன் எடுத்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து சோபியாவின் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
மகளின் சமூக வலைத்தள நடவடிக்கைகளுக்கு அவரது தந்தை மொகமத் பரூக் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆண் நண்பருடனான தொடர்பை துண்டிக்கும்படி வலியுறுத்தியதுடன், அவரது சகோதரர் ஹபிலும் சோபியாவை கண்டித்துள்ளார்.
இந்த குடும்பத் தகராறு அடுத்தகட்டமாக சோபியாவை கொலை செய்யும் முடிவுக்கு சென்றுள்ளது. தந்தையும் சகோதரரும் சேர்ந்து அவரை கெல்ஜிபுரா பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தைத் தேர்வு செய்த இருவரும் சோபியாவை தாக்கியுள்ளனர். ஹபில் மறைத்து எடுத்துச் சென்ற இரும்புச் சுத்தியலால் சோபியாவின் தலையில் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த சோபியா உயிரிழந்துள்ளார்.
கொலையை மறைக்க இருவரும் அடுத்ததாக விபத்து நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். சோபியாவை சாலையில் கிடத்திவிட்டு, அடையாளம் தெரியாத வாகனம் இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு தப்பிச் சென்றதாக காவல்துறையிடம் தெரிவித்துள்ளனர்.
ஆரம்பத்தில் விபத்து மரணமாக விசாரணை தொடங்கிய நிலையில், சம்பவத்தில் சந்தேகத்தை ஏற்படுத்திய சில தகவல்கள் காவல்துறையின் கவனத்துக்கு வந்தன. இதையடுத்து குடும்பத்தினரிடம் நடத்தப்பட்ட விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
விசாரணையின் முடிவில் சோபியாவின் தந்தை மொகமத் பரூக் மற்றும் சகோதரர் ஹபில் பரூக் ஆகியோர் கொலையில் ஈடுபட்டது காவல்துறையின் கவனத்துக்கு வந்தது. இருவரையும் கைது செய்து, கொலைக்கான காரணம் மற்றும் சம்பவத்தின் முழு பின்னணி குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read: கள்ளக்காதலனுடன் நெருக்கமாக இருந்த தாய்.. நேரில் பார்த்த மகளுக்கு நேர்ந்த கொடூரம்!
