மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்காக முழு வீச்சில் தயாராகி வருகின்றன அரசியல் கட்சிகள். திமுக, தவெக, அதிமுக கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து விட்ட நிலையில், இந்த இடைத்தேர்தல் ரிசல்ட் யாருக்கு சாதகமாக அமைய போகிறது என்பது குறித்தான விவாதங்கள் வெடித்துள்ளன. இதனிடையில் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த அமமுக, இடைத்தேர்தலிலும் ஆதரவு அளித்துள்ளது. இந்நிலையில் வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்து தவெகவில் இணைந்தவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா
சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பின்பாக அதிமுக எம்எல்ஏக்கள் வரிசையாக ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். இது அரசியல் வட்டாரத்தில் கடுமையான வாதங்களையும், விவாதங்களையும் கிளப்பியது. இதற்கிடையில் டிடிவி தினகரன் அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா பின்னணியில் குதிரை பேரம் உள்ளது என தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். இது தொடர்பாக தவெகவை கடுமையாக விமர்சனம் செய்தும் கொண்டிருக்கிறார்.
டிடிவி தினகரன் கடும் விமர்சனம்
இதனிடையில் தற்போது மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு என அறிவித்துள்ளார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். இப்படியான நிலையில் வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்தவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என காட்டமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், அதிமுகவின் வெற்றி சின்னமான இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்றவர்கள் மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற உறுப்பினர்கள்.
துரோகம் செய்தவர்களே வேட்பாளர்களாக நிற்கிறார்கள்
அந்த தொகுதி மக்கள் தமிழக வெற்றி கழகத்தை சார்ந்த வேட்பாளர்களை எதிர்த்து நின்ற அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் தெளிவாக வாக்களித்து வெற்றி பெற செய்தார்கள். அந்த வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சிக்கும், தொண்டர்களுக்கும், வாக்களித்த மக்களுக்கும் துரோகம் செய்து விட்டு ஆளுங்கட்சியை நோக்கி சென்றிருக்கிறார்கள். இன்றைக்கு அவர்களே வேட்பாளர்களாக நிற்கிறார்கள்.
தொகுதி மக்கள் பாடம் புகட்டுவார்கள்
அந்த தொகுதி மக்கள் அவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்பது எங்கள் அனைவரின் எதிர்பார்ப்பும் என தெரிவித்தார் டிடிவி தினகரன். அதோடு குதிரை பேரம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மக்கள் அவர்களுக்கு ஆட்சி அமைக்க ஆதரவு கொடுக்கவில்லை. அறுதி பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதிமுக எம்எல்ஏக்கள் 25 பேரை ஏமாற்றி அவர்களின் ஆதரவினை பெற்றார்கள். அவர்களுடைய பதவி போய் இருக்க வேண்டியது.
தேர்தலுக்கு பின்னால் நடந்த சம்பவம்! உண்மை உடைத்த திமுக நிர்வாகி! – aandal priyadharshini
விஜய் எப்படி நேர்மையானவர்என்று சொல்லி கொள்ள முடியும்?
நல்ல வேளையாக இபிஎஸ் அவர்களை ஏற்றுக்கொண்டார். அதே போன்று திமுக கூட்டணியில் தவெக எதிர்த்து வெற்றி பெற்ற தோழமை கட்சியினரிடம் அமைச்சர் பதவி தருகிறேன் என்று பேசி அவர்களுடைய ஆதரவை பெற்றார்கள். அதே போல் அமமுக கட்சி உறுப்பினரிடமும் குதிரை பேரம் நடத்தியது உங்கள் அனைவருக்கும் தெரியும். இப்படி ஆட்சி அமைப்பதற்கே தில்லு முல்லு செய்த தவெக எப்படி நேர்மையானவர்களாக இருக்க முடியும். திரு விஜய் எப்படி நேரமையானவர் என்று தன்னை சொல்லி கொள்ள முடியும் என்றும் கடுமையாக டிடிவி தினகரன் விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
