கம்பீரமாக நிற்கிறேன்; காரணம் சொல்கிறார் முதல்வர்

கோவை: ”சொன்னதை மட்டுமின்றி, சொல்லாததையும் செய்து உங்கள் முன் கம்பீரமாக நிற்கிறேன். இதேபோன்று, தான் செய்த சாதனைகளை இபிஎஸ் பட்டியலிட முடியுமா,” என்று கோவையில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

கோவையில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

சாதனை திட்டங்கள்

திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு அதிக முறை கோவைக்கு வந்துள்ளேன். கோவையும் எனது ஊர் தான் என்றளவுக்கு ஒன்றி போயுள்ளேன். லோக்சபா தேர்தலிலும், உள்ளாட்சி தேர்தலிலும் ஆதரவு தந்தீர்கள். 2026 தேர்தலிலும் முழு வெற்றியை தர வேண்டும்.5 ஆண்டு ஆட்சியில் மேற்கு மண்டலத்துக்கு, கோவைக்கு பல்வேறு சாதனை திட்டங்கள் செய்துள்ளோம்.சொன்னதை மட்டுமின்றி சொல்லாததை செய்து உங்கள் முன் கம்பீரமாக நிற்கிறேன்.

இதுபோன்று செய்த சாதனைகளை இபிஎஸ் பட்டியலிட முடியுமா? தேர்தல் அறிக்கையில் சொன்னதை செய்யவில்லை. ஆனால், அதிமுக தேர்தல் அறிக்கை திட்டங்களை நாங்கள் காப்பியடித்து விட்டதாக வாய்கூசாமல் பொய் சொல்கிறார் இபிஎஸ். நமது திட்டங்களை தான் இபிஎஸ் காப்பியடித்துள்ளார்.10 ஆண்டுகளில் தான் செய்த சாதனைகளை அவரால் பட்டியலிட முடியவில்லை.

எளிது

கடந்த லோக்சபா தேர்தலில் மோடி சென்னை வந்தார். 40 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். இந்த முறை மோடி வருவதால் 200 தொகுதிகள் இலக்கு எளிதாகிவிடும்.மோடி, அமித்ஷா வருவது நமது வெற்றிகளை அதிகபடுத்தும். பாஜவை தமிழகம் ஏன் எதிர்க்கிறது என்று சொன்னால் தெரியாது.

பொய்

தமிழை, தமிழரை, தமிழகத்தை பாஜ வஞ்சிக்கிறது. அவமானப்படுத்துகிறது. தமிழகம் வந்தால், தமிழ் பாசத்தில் நம்மை மிஞ்சக்கூடிய அளவுக்கு நடிக்கிறார். பீஹார் தேர்தலின் போது, பிரதமர் மோடி, தமிழகத்தில் பீஹார் மக்கள் தாக்கப்படுவதாக பொய் பேசினார். அவர் வகிக்கும் பதவிக்கு இது அழகா? பீஹாரில் பேசியதை தமிழகம் வரும் மோடி பேசுவாரா?

தமிழகத்தில் பல்வேறு இனங்களை அமைதியாக வாழ்கின்றனர். வந்தாரை வாழ வைக்கும் நம்மை பார்த்து அபாண்டமாக பழி போட்டவர் பிரதமர் மோடி. தர்மேந்திர பிரதான், இதை விட கேவலமாக பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மன்னிப்பு கோரினார்.

ஒடிசாவில் புரி ஜெகநாதர் கோவில் சாவி தமிழகம் சென்றுவிட்டது என்றனர். தமிழர்களை திருடர்களை போல் சித்தரிக்கின்றனர். கர்நாடகாவை சேர்ந்த மத்திய அமைச்சர் ஷோபா, தமிழகத்தில் இருந்து கர்நாடகாவில் வந்து வெடிகுண்டு வைக்கின்றனர் என்றார். பிரச்னை ஆன பிறகு மன்னிப்பு கோரினார்.

ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுவது போன்று ஆக்ராவில் மெட்ரோ ரயில் விட்டுள்ளது பாஜ. அங்கு 16 லட்சம் மக்கள் தொகை. அங்கு அனுமதிக்கின்றனர். பாட்னாவிலும் இதே நிலை தான். கோவை, மதுரையில் மெட்ரோவுக்கு அனுமதி மறுத்த காரணம் என்ன. காரணம் இரண்டும் தமிழகத்தில் இருப்பதுதான். பாஜவுக்கு ஓட்டளிக்காதது பாவச்செயலா?கோவையை கைப்பற்ற பாஜ துடிக்கிறது. எந்த முகத்தை வைத்துக் கொண்டு வருகின்றனர். மத்திய பட்ஜெட்டில் நம்மை மொத்தமாக மறந்துவிடுவார்கள்.

ஞாபகம் வராது

தமிழகத்தை பழிவாங்கும் காரணத்தினால் தான் மக்கள் ஓட்டுச்சாவடிக்கு செல்லும் போது ஞாபகம் வராது. இனியும் வரக்கூடாது. எத்தனை தடை போட்டாலும் வளர்ச்சி திட்டங்களை கொடுத்துக் கொண்டே இருப்பேன். 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் திட்டத்தை அனைவரும் பேசி கொண்டே இருக்கின்றனர்.

திமுகவின் தேர்தல் அறிக்கையை காப்பியடித்து அறிக்கை வெளியிட்ட இபிஎஸ், இன்னும் சில நாட்கள் பொறுத்து இருக்கலாமோ என புலம்பி கொண்டு இருப்பார். கலவரம் செய்தால் வெற்றி பெறலாம் என நினைப்பவர்களுக்கு இந்த தேர்தலில் நீங்கள் பதிலடி கொடுக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

Source link