பின்னர் காவல் நிலையத்தில் வைத்து இரவு முழுவதும் போலீஸார் தாக்கியதில் முதலில் பென்னிக்ஸ், அடுத்து ஜெயராஜ் உயிரிழந்தனர். இதையடுத்து சிபிஐ கொலை வழக்குப் பதிவு செய்து காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், காவலர்கள் முருகன், சாமதுரை, முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயிலுமுத்து ஆகியோர் கைது செய்யப்பட்டு மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. விசாரணை முடிந்து 9 பேரும் குற்றவாளிகள் என்றும் தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி முத்துக்குமரன் உத்தரவிட்டார். இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி முத்துக்குமரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. ஸ்ரீதர் உள்ளிட்ட 9 பேரையும் போலீஸார் ஆஜர்படுத்தினர்.
பின்னர் சிபிஐ வழக்கறிஞர் விஜயன் வாதிடுகையில், குற்றம் நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். தூக்குத் தண்டனை, இரட்டை ஆயுள் போன்ற அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். அரிதினும் அரிதான காவல் கொடூர மரண வழக்குகளில் தூக்குத் தண்டனை வழங்கலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
