ஒவ்வொரு தேர்தல் தேதிகளிலும், ‘காலையில் போனால் கூட்டமிருக்காது… வரிசையில் நிற்கத் தேவையில்லை…’, ‘இப்போது போனால் கூட்டமிருக்காது… அப்போது போனால் கூட்டமிருக்காது’ என்று வெயிலில் இருந்து தப்பிக்கவும், கூட்டத்தில் இருந்து தப்பிக்கவும் ஏகப்பட்ட பிளான்களைப் போடுவோம்.
ஆனால், தமிழ்நாட்டில் ஒரு சில வாக்குச்சாவடிகளில் மிகவும் சொற்பமான வாக்காளர்களே வாக்களிக்கின்றனர்… வாக்களிக்கவும் உள்ளனர். அதனால், அவர்களுக்கு இந்தக் கவலை எல்லாம் இல்லை.
அவர்களுக்கும் இந்திய தேர்தல் ஆணையம் வாக்குச்சாவடிகளை அமைத்துள்ளது.

அவை எங்கெங்கே என்பதைப் பார்க்கலாம்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் வருசநாடு ஒன்றியத்தின் கீழ் வெள்ளிமலை வனப்பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் எஸ்டேட்டின் தொழிலாளர்களுக்காக இந்த வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வாக்குச்சாவடியில் ஐந்து பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர்.
புலிகள் காப்பகமாக இவ்விடம் அறிவிக்கப்பட்ட பிறகு, வனத்துறை விதித்த கட்டுப்பாடுகளினால் பலர் அங்கிருந்து வெளியேறினர். இதனால் ஒரு சில வாக்காளர்களே தற்போது எஞ்சியுள்ளனர்.
செந்தில், ஜெயராணி, பாவெல், சுதா மற்றும் ரோஹித் என ஐந்து வாக்காளர்களே வாக்களிக்க உள்ளனர். இவர்கள் அங்கே உள்ள தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்கிறார்கள். இதற்காக அதிகாரிகள் காட்டுக்குள் சென்று பயணிக்க உள்ளனர்.
கடந்த தேர்தலில், இங்கே வாக்காளர்களின் எண்ணிக்கை 14 ஆக இருந்துள்ளது. இப்போது ஐந்து பேராகக் குறைந்துள்ளது.

அடுத்ததாக, போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியின் கீழ் சென்ட்ரல் ஸ்டேஷன், ஊத்துக்காடு என்கிற இரண்டு வாக்குச்சாவடிகள் உண்டு.
இங்கே செல்ல எந்தப் போக்குவரத்து வசதியும் இல்லை. அதனால், இந்த வாக்குச் சாவடிகளுக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் 8 கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டும். குறுகிய காட்டுப்பாதைகளில் வாகனங்கள் செல்ல முடியாததால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் பிற வாக்குச்சாவடி பொருள்களை எடுத்துச்செல்ல கழுதைகள் பயன்படுத்தப்படுகின்றன.
நெல்லை மாவட்டத்திலும் மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து 30 கிலோமீட்டர் தூரத்தில் மாஞ்சோலை, ஊத்து, காக்காச்சி, நாலுமுக்கு மற்றும் குதிரைவெட்டி போன்ற இடங்கள் உள்ளன.
தேயிலைத் தோட்டத்தின் செயல்பாடு 2028-ம் ஆண்டோடு காலக்கெடு முடிவுக்கு வருவதால் தொழிலாளர்களின் குடும்பங்கள் தேயிலைத் தோட்டத்திலிருந்து சமவெளிகளுக்குச் செல்லத் தொடங்கியுள்ளார்கள்.
கடந்த டிசம்பர் மாதத்திற்குப் பின் சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தத்திற்குப் பிறகு வாக்காளர் இடப்பெயர்வு போன்ற காரணங்களால் வாக்காளர்களின் எண்ணிக்கை 78 ஆகக் குறைந்தது.

இறுதி வாக்காளர் பட்டியலில் மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட இடங்களைச் சேர்த்து மொத்தம் 78 ஓட்டுகள் மட்டுமே இருப்பதாக மாவட்ட நிர்வாகம் உறுதி செய்தது. முன்பு 5 வாக்குச்சாவடிகள் மாஞ்சோலையில் இருந்தன.
தற்போது மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து என 3 வாக்குச்சாவடிகளாகக் குறைக்கப்பட்டுவிட்டது.
தற்போது ஊத்து வாக்குப்பதிவு மையத்தில் மொத்தம் 10 வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். 10 வாக்காளர்களுக்காக வாக்குச்சாவடி மையம் அமைக்கப்படுகிறது.
சுமார் 40 கிலோமீட்டர் தூரத்திற்கு மலைப்பகுதி வழியாக வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தல் பணிக்காக பயணிக்க உள்ளனர்.
