முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு – வசந்தம் கார்த்திகேயன் மீது வழக்கு பதிவு – defamatory remarks against cm vijay case filed against dmk leader vasantham karthikeyan following tvk complaint

முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் திமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் ஆ.ராசா, சேகர்பாபு மற்றும் வசந்தம் கார்த்திகேயன் உள்ளிட்டோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் பேசிய மிசா தொடர்பான கருத்துகளும், அவர் தாடையில் கையை வைத்து செய்த சைகையும் கடந்த சில நாட்களாக தமிழக அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மிசா விவகாரத்தில் விஜய்யின் பேச்சு

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் சட்டம் ஒழுங்கு குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் விஜய், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிசா காலத்தில் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.

மேலும், “மிசாவில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும்” என்று விஜய் பேசியதாக கூறப்படுகிறது. அப்போது அவர் தனது தாடையில் கையை வைத்து செய்த சைகையும் அரசியல் ரீதியாக சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த சைகை, மிசா காலத்தில் சிறையில் இருந்தபோது மு.க.ஸ்டாலின் தாக்கப்பட்டு அவரது தாடை காயமடைந்த சம்பவத்தை கேலி செய்யும் வகையில் இருந்ததாக திமுக தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் திமுக போராட்டம்

இந்த விவகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக சார்பில் இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

இந்த ஆர்ப்பாட்டங்களில் திமுகவின் முக்கிய தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு முதலமைச்சர் விஜய்யின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர். அப்போது ஆ.ராசா, சேகர்பாபு, வசந்தம் கார்த்திகேயன் உள்ளிட்டோர் முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பான பேச்சுகள் சமூக வலைதளங்களிலும் பரவிய நிலையில், அரசியல் கட்சிகளுக்கு இடையே மீண்டும் மோதல் உருவாகியுள்ளது.

தவெகவினர் புகாரில் வழக்குப்பதிவு

இந்த நிலையில், முதலமைச்சர் விஜய் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் குறித்து ஆபாசமாகவும் அவதூறாகவும் பேசியதாக கூறி, தவெகவினர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
கடலூர் தேவனாம்பட்டினம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட இந்தப் புகாரின் அடிப்படையில், ஆ.ராசா, சேகர்பாபு மற்றும் வசந்தம் கார்த்திகேயன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஏற்கனவே மிசா விவகாரம் தொடர்பாக திமுக மற்றும் தவெக இடையே நீடித்து வரும் அரசியல் மோதல் தற்போது காவல் நிலைய வழக்கு வரை சென்றுள்ளது.

மேலும் தீவிரமாகும் திமுக தவெக மோதல்?

ஒருபுறம், முதலமைச்சர் விஜய்யின் சட்டப்பேரவை பேச்சுக்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மறுபுறம் திமுக நிர்வாகிகளின் பேச்சுகளுக்கு எதிராக தவெக தரப்பினர் சட்டரீதியான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

இதன் மூலம் திமுக மற்றும் தவெக இடையேயான அரசியல் மோதல் மேலும் தீவிரமடையும் சூழல் உருவாகியுள்ளது. இரு தரப்பினரும் தொடர்ந்து ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், இந்த வழக்கு விவகாரம் தமிழக அரசியலில் அடுத்தகட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source link