வளைகுடா நாடுகளின் பாலங்களை தகர்க்க ஈரான் முடிவு

டெஹ்ரான்: ஈரானில், ‘பி 1’ என்ற மிகப்பெரிய பாலத்தின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க, வளைகுடா நாடுகளின் எட்டு பாலங்களை ஈரான் குறிவைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேற்காசிய நாடான ஈரானுக்கும், அமெரிக்க – இஸ்ரேலிய கூட்டு படையினருக்குமான போர், 35 நாட்களாக நடந்து வருகிறது. பரஸ்பர தாக்குதல்கள் மேற்காசியா முழுதும் பதற்றத்தை அதிகரித்துள்ளன.

சமீபத்தில், ஈரானின் வடக்கே அமைந்துள்ள அல்போர்ஸ் மாகாணத்தின் கரஜ் பகுதியில் உள்ள, பி 1 பாலத்தின் மீது அமெரிக்கா – இஸ்ரேல் படைகள் குண்டு வீசி தாக்கின. இதில் பாலம் முழுமையாக தகர்க்கப்பட்டதுடன், எட்டு பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்க, வளைகுடா நாடுகளில் உள்ள எட்டு முக்கிய பாலங்களை தகர்க்க ஈரான் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஈரான் குறிவைத்துள்ள பாலங்கள் • குவைத்தின் வடக்கு பகுதியை இணைக்கும் மிக முக்கிய பாலமான ஷேக் ஜாபர் அல் – அஹ்மத் அல் – சபா கடல் பாலம். இது உலகின் மிக நீளமான கடல் பாலங்களில் ஒன்று • சவுதி அரேபியாவையும், பஹ்ரைனையும் இணைக்கும் ஒரே சாலை வழி பாலமான கிங் பஹத் காஸ்வே பாலம் • ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள அபுதாபி தீவை, நிலப்பகுதியுடன் இணைக்கும் மிக முக்கியமான கட்டட கலை பாலமான ஷேக் சயீத் பாலம் * அபுதாபி நகரை சாடியத் தீவுடன் இணைக்கும், 10 வழி சாலை கொண்ட முக்கிய பாலம் மற்றும் அபுதாபி தீவையும், நிலப்பகுதியையும் இணைக்கும் பழமையான மற்றும் முக்கிய பாலங்களில் ஒன்றான அல் மக்தா பாலம். • ஜோர்டான் – மேற்கு கரைக்கு இடையிலான முதன்மையான எல்லை கடக்கும் பாலமான கிங் ஹுசைன் – ஆலன்பி பாலம் • ஜோர்டான் நதிக்கரையில் அமைந்துள்ள மற்றொரு முக்கியத்துவம் வாய்ந்த பாலமான தாமியா – ஆடம் பாலம் • ஜோர்டான் தலைநகர் அம்மானில் அமைந்துள்ள கேபிள் பாலமான அப்துன் பாலம்

Source link