திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்ச்சத்திரம் அருகே உள்ள தலையூத்து அருவி அமைந்துள்ளது. இத்தகைய சூழலில் தான் விடுமுறை தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த 11 பேர் அனுமதியின்றி நண்பர்களுடன் இந்த அருவியில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது அவர்களில் ஒருவர் அருவியின் ஆழமான பகுதியில் உள்ள நீரில் மூழ்கியுள்ளார். இதனைக் கண்ட மேலும் மூவர் அவரை மீட்க உள்ளே இறங்கியுள்ளனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக 4 பேரும் நீரில் மூழ்கியுள்ளனர். இது குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மூவரின் உடல்களை மீட்டனர். மேலும் ஒருவரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதே சமயம் மீட்புப் பணியானது இரவு நேரத்தில் நடைபெற்ற போது சற்று தொய்வு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுற்றுலாப் பயணிகள் நீர்நிலைகளில் இறங்கும் போது போதிய எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அருவியில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக இளைஞர்கள் அருவி பகுதிக்கு உற்சாகமாக சென்ற வீடியோ வெளியாகி மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
