காரைக்குடி: நாடாளுமன்றத்தை ‘ரப்பர் ஸ்டாம்பாக’ மாற்ற மத்திய அரசு சதி செய்வதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஏப்ரல் 16-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை நாடாளுமன்ற 2 அவைகளையும் கூட்டுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவருக்கு கடிதம் வந்தது.
அதற்கு காங்கிரஸ் தலைவர் அனுப்பிய பதிலில், 106-வது அரசியல் சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றிய பின்னர் 30 மாதங்கள் அமைதியாக இருந்துவிட்டு தற்போது நாடாளுமன்றத்தை கூட்டுவதாக அறிவித்திருக்கிறீர்கள். முதலில், நாடாளுமன்றத்தை கூட்டுவது தொடர்பாகவும், என்ன மசோதா கொண்டு வர அரசு திட்டமிடுகிறது என்பது குறித்தும் பிரதமர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டி விவாத்திருக்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார்.
ஆனால், அதை பொருட்படுத்தாமல் நாடாளுமன்றத்தை கூட்டுகின்றனர். மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 50 சதவீதம் உயர்த்தி, 543-லிருந்து 816 ஆக அதிகரிக்கும் மசோதாவும், தொகுதி மறுவரையறை மசோதாவும் கொண்டு வரப்போவதாக 2 தகவல்கள் வந்துள்ளன.
