மதுரை: ”தமிழக அரசியலில் விஜய்காந்த் போல் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார். அது தி.மு.க.,வுக்குதான் பாதிப்பை ஏற்படுத்தும்” என மதுரையில் அ.ம.மு.க., பொதுச்செயலாளர் தினகரன் கூறினார்.
அவர் கூறியதாவது: தி.மு.க., அரசை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் உறுதியாக உள்ளனர். தே.ஜ., கூட்டணி தலைவர்கள் சிலரை குற்றவாளிகள் என முதல்வர் கூறுகிறார். குற்றவாளிக்கும், குற்றம் சுமத்தப்பட்டுவர்களுக்கும் உள்ள அர்த்தம் தெரியாமல் முதல்வர் பேசுகிறார். அவர் பயத்தின் உச்சத்தில் உள்ளார்.
தி.மு.க., அரசின் 5 ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் ஊழல். 30 சதவீதம் கமிஷன் பெற்றுக்கொண்டுதான் வேலை நடப்பதாக மக்கள் கூறுகின்றனர். திராவிடல் மாடல் ‘சீட்டிங் மாடல்’ ஆகி விட்டது. சொன்ன வாக்குறுதிகளை காப்பாற்றவில்லை. ‘தேர்தலில் போட்டியிட போவதில்லை’ என அண்ணாமலை முன்பே என்னிடம் தெரிவித்தார். தமிழகம் முழுவதும் அவர் பிரசாரம் செய்வார். கூட்டணி கட்சிகளுக்குள் அதிருப்தி இருப்பது காலம் காலமாக இருக்கிறது. இதை மீடியாக்கள்தான் பெரிதாக்குகின்றன.
தமிழகத்தில் தொங்கு சட்டசபை அமையாது. அ.தி.மு.க., ஆட்சிதான் அமையும். தமிழக அரசியலில் விஜய்காந்த் போல் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார். த.வெ.க., பலமான கூட்டணி அமைத்திருந்தால் அது தி.மு.க.,வுக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும். அதனால்தான் தி.மு.க., அதிக இடங்களில் போட்டியிடுகிறது. 26 கட்சிகளுடன் கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இவ்வாறு கூறினார்.
