நுாக்: கிரீன்லாந்தை ஆக்கிரமிக்கும் அமெரிக்காவின் முயற்சிக்கு எதிராக வட அமெரிக்க நாடான கனடாவும், ஐரோப்பிய நாடான பிரான்சும் அங்கு துணை துாதரகங்களை திறந்துள்ளன.
ஐரோப்பிய நாடான டென்மார்க்கின் தன்னாட்சி பிரதேசம் கிரீன்லாந்து. இங்கு அரிய கனிமங்கள் உள்ளிட்ட வளங்கள் நிறைந்து உள்ளன.
பாதுகாப்பு காரணங்களுக்காக கிரீன்லாந்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விரும்புகிறார்.
இதற்கு டென்மார்க் மற்றும் ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதனால், அந்நாடுகளுக்கு வரியை அதிகப்படுத்தினார் டிரம்ப். பின்னர் அதை வாபஸ் பெற்றார்.
இந்நிலையில், நேட்டோ கூட்டமைப்பில் உள்ள ஐரோப்பிய நாடான பிரான்ஸ், வட அமெரிக்க நாடான கனடா, கிரீன்லாந்தில் துணை துாதரகங்களை திறந்துள்ளன.
தலைநகரான நுாக் நகரில் இந்த துாதரகங்கள் திறக்கப்பட்டுள்ளன. கனடா, 2024ம் ஆண்டிலேயே கிரீன்லாந்தில் துணைத் துாதரகம் திறக்க திட்டமிட்டிருந்தது.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கடந்த ஜூன் மாதம் அங்கு சென்றபோது இதை அறிவித்திருந்தார். அப்போது டிரம்பின் திட்டங்களுக்கு எதிர்ப்பையும் வெளிப் படுத்தினார்.
இதற்கு முன் அங்கு ஐஸ்லாந்து மற்றும் அமெரிக்கா மட்டுமே துாதரகங்களை கொண்டிருந்தன. இப்போது கனடாவும், பிரான்சும் இணைவதன் மூலம், ஆர்க்டிக் பகுதியில் நேட்டோ நாடுகளின் ஆதரவு மேலும் வலுப்பெற்றுள்ளது.
இந்த ஆதரவுக்கு கிரீன்லாந்து மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
