கரூர் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட தவெக நிர்வாகி அதிமுகவில் தஞ்சம்

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தீவிரமாகப் பரப்புரையில் இறங்கியுள்ளன. இதனிடையே, தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. விடுமுறை நாட்கள் போக வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் ஒரு நாளே இருப்பதால் வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதேபோல் பிரச்சாரத்திலும் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் கரூர் சம்பவத்தின் போது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தரப்பில் கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவரான பவுன்ராஜ் அதிமுகவில் இணைந்துள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் என 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் முன்னதாக இந்த சம்பவத்தில் கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் மற்றும் நகரச் செயலாளர் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர். கைதாகி சிறையில் இருந்த பவுன்ராஜ் ஜாமீனில் வெளியே வந்திருந்தார்.  2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களை தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் அண்மையில் அறிவித்திருந்த நிலையில் மதியழகனுக்கு சீட் வழங்கப்பட்டிருந்தது. அதில் பவுன்ராஜ் பெயர் இடம்பெறவில்லை. இதனால் அவர் அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் திடீரென அவர் கரூர் அதிமுக நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார்.

Source link