எர்ணாகுளம்: தான் செய்த ஊழலில் இருந்து தப்பிக்க, பாஜவினருடன் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஏற்கனவே சமரசம் செய்து கொண்டதாக கேரளாவில் பிரசாரம் செய்த காங்கிரஸ் எம்பி ராகுல் குற்றம்சாட்டியுள்ளார்.
எர்ணாகுளத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் அவர் கூறியதாவது; பாஜ மற்றும் ஆர்எஸ்எஸ்க்கு எதிராக கேள்வி எழுப்புபவர்கள் குறி வைக்கப்படுவார்கள். என் மீது 36 வழக்குகள் போடப்பட்டுள்ளன. என்னுடைய எம்பி பதவியை பறித்தார்கள். என்னுடைய அரசு பங்களாவை காலி செய்தார்கள். நான் தற்போது ஜாமினில் இருக்கிறேன்.
அதுமட்டுமில்லாமல், அமலாக்கத்துறை என்னிடம் 55 மணிநேரம் விசாரணை நடத்தியது. நான் இடதுசாரி கூட்டணி கட்சி தொண்டர்கள் மற்றும் கட்சி தலைவர்களிடம் ஒரே ஒரு கேள்வியை கேட்க விரும்புகிறேன். உங்கள் தலைவரும், முதல்வருமான பினராயி விஜயனை மட்டும் ஏன் இதுவரை எந்த அமைப்பும் விசாரணை செய்யவில்லை? இதற்கான காரணம், உங்கள் முதல்வர் தான் செய்த ஊழலில் இருந்து தப்பிக்க, ஏற்கனவே அவர்களுடன் சமரசம் செய்து கொண்டார்.
இந்த ஆட்சியில் சபரிமலை கோவிலுக்கும், ஐயப்பனுக்கும் எதிராக மிகப்பெரிய குற்றம் இழைக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் தலைவர்கள் கோவிலில் இருந்த தங்கத்தைத் திருடிவிட்டு அதற்குப் பதிலாக பித்தளையை வைத்துள்ளார்கள். ஆனால், பிரதமர் இதைப் பற்றி எதுவும் சொல்லவில்லையே? ஒரு வார்த்தை கூட பேசவில்லையே? ஏன்? ஏனென்றால் அவர்களுக்குக் கேரளாவில் இடதுசாரி அரசு இருக்க வேண்டும். ஏனெனில் இடதுசாரி முன்னணியால் ஒருபோதும் பாஜவிற்கு அச்சுறுத்தல் ஏற்படாது என்பது அவர்களுக்குத் தெரியும். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி தான் பாஜவுக்கும், ஆர்எஸ்எஸூக்கும் உண்மையான அச்சுறுத்தல், இவ்வாறு அவர் பேசினார்.
