பிப்.,14ல் காரைக்கால் வருகிறார் அமித் ஷா; கூட்டணியை இறுதி செய்ய பா.ஜ., தீவிரம்

சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வரும் 14ம் தேதி காரைக்கால் வருவதால், அதற்குள் கூட்டணியை இறுதி செய்ய, பா.ஜ., தீவிரம் காட்டி வருகிறது.

வரும் சட்டசபை தேர்தலுக்கான தேசிய ஜனநாயக கூட்டணியில், அ.தி.மு.க., – பா.ஜ., – பா.ம.க., – அ.ம.மு.க., – த.மா.கா., – புதிய நீதி கட்சி – இந்திய ஜனநாயக கட்சி – ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. தே.மு.தி.க., புதிய தமிழகம் கட்சிகளை கூட்டணியில் சேர்க்க, அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும் தீவிரம் காட்டி வருகின்றன.

அதிக தொகுதிகள், ராஜ்யசபா எம்.பி., பதவி போன்றவற்றை கேட்பதால், தே.மு.தி.க.,வுடன் எந்த முடிவும் எட்டப்படவில்லை. தொகுதி பங்கீடு குறித்து தி.மு.க.,வுடனும் தே.மு.தி.க., பேசி வருகிறது. ஜான் பாண்டியன் இருப்பதால், புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி, கூட்டணியில் இணைவதற்கு தயக்கம் காட்டி வருகிறார். இதனால், கடந்த ஜன., 23ல் பிரதமர் மோடி சென்னை வந்தபோது, கூட்டணியை இறுதி செய்ய முடியவில்லை.

இந்நிலையில் வரும் 14ம் தேதி, புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட காரைக்காலில் நடக்கும் பா.ஜ., பொதுக் கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்கிறார். அதற்குள் கூட்டணியை முடிக்க, பா.ஜ., தலைவர்களுக்கு அமித் ஷா அறிவுறுத்தி உள்ளதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

தமிழக பா.ஜ., தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட மத்திய வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல், இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்த பணிகளில் இருப்பதால், கூட்டணி பேச்சு தாமதமாகி வருகிறது. இன்னும் சில நாட்களில், தமிழக தேர்தல் பணிகளில் பியுஷ் கோயல் ஈடுபட உள்ளதாக பா.ஜ.,வினர் தெரிவிக்கின்றனர்.

வரும் 14ம் தேதிக்குள் கூட்டணி இறுதி செய்யப்பட்டால், திருச்சியில் கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரையும் அமித் ஷா சந்தித்து ஆலோசனை நடத்துவார் என, பா.ஜ., நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Source link