ராட்டினம் கவிழ்ந்து இன்ஸ்பெக்டர் பலி; உதவிக்காக ஓடியபோது பரிதாபம்

பரிதாபாத்: ஹரியானா மாநிலம் பரிதாபாதில், கைவினை பொருட்கள் கண்காட்சியில் ராட்சத ராட்டினம் கவிழ்ந்து விழுந்ததில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் உயிரிழந்தார். 13 பேர் படுகாயமடைந்தனர்.

ஹரியானாவில் முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. பரிதாபாத்தில் பிரசித்தி பெற்ற சூரஜ்குண்ட் கைவினை பொருட்கள் கண்காட்சி நடந்து வருகிறது.

இதனை காண வரும் மக்களுக்காக பிரம்மாண்ட ராட்டினங்கள் இயக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், நேற்றிரவு திடீரென ஒரு ராட்சத ராட்டினம் கவிழ்ந்து விழுந்தது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீஷ் பிரசாத் உதவிக்காக ஓடிச் சென்றபோது, ராட்டினத்தின் ஒரு பகுதி அவர் மீதும் விழுந்தது. இதில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். விபத்தில் 13 பேர் வரை காயமடைந்தனர்.

முன்னதாக பொதுமக்கள் உணவு சாப்பிட ஒதுக்கப்பட்ட இடத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட கதவு, பலத்த காற்று வீசியதில் விழுந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் பொழுதுபோக்கு கண்காட்சியில் நடந்த இந்த விபரீதம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

Source link