கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்திருந்த வி.சி.க தலைவர் திருமாவளவன், தற்போது போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்திருக்கிறார்.
அத்துடன், தனக்கு பதிலாக முன்னாள் எம்.பி இளையபெருமாளின் மகன் ஜோதிமணி போட்டியிடுவார் என்றும் தெரிவித்திருந்தார். அந்த அறிவிப்பை அடுத்து தன்னை சந்தித்த செய்தியாளர்களிடம் பேசிய ஜோதிமணி, “விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து இதுவரை யாரும் என்னிடம் பேசவில்லை.
காட்டுமன்னார்கோயில் தொகுதியில் போட்டியிடுவதற்காக காங்கிரஸ் கட்சியில்தான் நான் விருப்ப மனுவை கொடுத்திருந்தேன். ஆனால் காங்கிரஸ் – தி.மு.க கூட்டணியில் காட்டுமன்னார்கோயில் தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்படவில்லை. அதேசமயம் இந்தத் தொகுதியை கூட்டணிக் கட்சியான வி.சி.க-வுக்கு ஒதுக்கியிருந்தார்கள்.
இந்த சூழலில்தான் வி.சி.க தலைவர் திருமாவளவன் அவர்கள் என்னை வேட்பாளராக அறிவித்திருக்கிறார். அவரின் அந்த அறிவிப்பு எனக்கு மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. தலைவர் திருமாவளவனின் அறிவுரைப்படி என்னுடைய அடுத்தகட்ட செயல்பாடுகள் இருக்கும்.
நான் தற்போது காங்கிரஸ் கட்சியில்தான் பயணித்துக் கொண்டிருக்கிறேன். வி.சி.க-வுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த என்னை எப்படி வேட்பாளராக அறிவித்தார்கள் என்று தெரியவில்லை.
காங்கிரஸும், வி.சி.க-வும் தி.மு.க கூட்டணியில்தான் அங்கம் வகிக்கின்றன. அதனடிப்படையில் எனக்கு தொகுதியை விட்டுத்தருமாறு, வி.சி.க தலைவரிடம் எங்கள் காங்கிரஸ் தலைமை கேட்டிருக்கலாம்.

அல்லது தலைவர்களாக எடுத்த முடிவின்படி எனக்கு இந்த சீட் கிடைத்திருக்கலாம். அதேபோல, நான் எந்த சின்னத்தில், எப்படி போட்டியிடுவேன் என்பது குறித்து இதுவரை எனக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
வி.சி.க-வின் சின்னத்தில் போட்டியிட சொல்வாரா அல்லது காங்கிரஸின் சின்னத்தில் போட்டியிட சொல்வாரா என்று தெரியவில்லை. காங்கிரஸ் தலைவரும், விசிக தலைவரும் ஒன்றாக சேர்ந்து என்ன சொல்கிறார்களோ அதன்படி செயல்படுவேன்” என்றார்.
